நியூயார்க்: இஸ்தான்புல்லை நோக்கி டெர்கிஷ் விமானச் சேவைவழித் தமது பயணத்தைத் தொடங்கிய பெண் ஒருவர், கழிவறைக்குச் செல்வதற்காக எழுந்தபோது தமது இருக்கையில் ஒரு சிறிய பூச்சி ஊர்ந்து செல்வதைக் கவனித்தார்.
அதை அந்தப் பெண் சொடுக்கச் சென்றபோது அவரின் நண்பர் தடுத்து, “அது மூட்டைப் பூச்சி,” என்றாராம்.
பூச்சியைப் படம்பிடித்து வைத்துக்கொண்டார் பெண்.
விமானச் சிப்பந்தியிடம் இதுகுறித்து தெரிவித்த பிறகு, அவர் பூச்சியை அப்புறப்படுத்திவிட்டார். அது உண்மையாகவே மூட்டைப் பூச்சியா என்று நண்பர்கள் இருவரும் பின்னர் விமானச் சிப்பந்தியிடம் வினவியபோது அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டார் அவர்.
“விமான நிலையத்தில் என் ஆடைகள் அனைத்தையும் களைந்துவிட்டு வேறு உடை உடுத்திக்கொண்டேன். எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் வீட்டுக்கு மூட்டைப் பூச்சியைக் கொண்டு சென்றால்?” என்றார் 36 வயதுடைய திருவாட்டி பேஷன்ஸ் டிட்கோம்ப்.
இந்தச் சம்பவம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. ஆதாரத்தோடு விமானச் சேவையிடம் அவர் புகார் அளித்தும் நிறுவனம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.
இதையடுத்து, அதே ஆண்டில் அக்டோபர் மாதம், வேறு இரண்டு பயணிகளுக்கும் அதே கதி நேர்ந்தது.
இஸ்தான்புல் நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு திரு மேத்யூ மாயர்ஸ் மற்றும் அவரின் காதலி சென்று கொண்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது இருக்கைகளில் மூட்டைப் பூச்சிகள் இருந்ததுடன் மேலிருந்து சில கீழே விழுந்தன. ஒருவரது மடி மீது மூட்டைப் பூச்சிகள் விழுவதையும் திரு மேத்யூ கண்டார்.
மூன்று வாரங்கள் கழித்து மலேசியாவைச் சேர்ந்த ஓர் அறிவியல் ஆசிரியருக்கும் அதே நிலைமை. அவருக்கு உடல் முழுக்க 13 கடிகள்.
டெர்கிஷ் விமானச் சேவை 300க்கும் மேற்பட்ட இடங்களுக்குக் கிட்டத்தட்ட 400 விமானங்களை இயக்கி வருகிறது.
இதற்கிடையே, மூட்டைப் பூச்சிகளை ஒழித்துக்கட்ட விமானத்தைச் சேவையிலிருந்து அகற்றுவது கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.