மத்திய கிழக்குப் பதற்றத்தால் தாய்லாந்தில் உணவுப் பொருள் விலை உயர்வு

மத்திய கிழக்குப் பதற்றத்தால் தாய்லாந்தில் உணவுப் பொருள் விலை உயர்வு

2 mins read
f866affd-fa69-4811-83bd-1bd1ccd6182b
ஏப்ரல் 8ஆம் தேதி, பேங்காக்கில் உள்ள சந்தையில் உணவுப் பொருள் வாங்கிய மக்கள். - படம்: இபிஏ

பேங்காக்: உலகளாவிய எரிசக்தி விலையேற்றம், தாய்லாந்துப் பொருளியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள சந்தைகளில் இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் எரிசக்தி விலையில் நிலையற்றதன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட தாய்லாந்து வணிக அமைச்சு, வேளாண் பயனீட்டாளர் பொருள்களின் விலையும் ஏறுமுகத்தில் உள்ளதாகத் தெரிவித்தது.

குறிப்பாக, மார்ச் தொடக்கத்திலிருந்து கோழி இறைச்சியின் விலை உயர்ந்து வருகிறது. முன்னதாக, ஒரு கிலோ 80 முதல் 85 பாட் (S$3) வரை விற்கப்பட்ட கோழிக் கால்களின் விலை, ஏப்ரல் 17 நிலவரப்படி 92 முதல் 95 பாட் வரை அதிகரித்துள்ளது. கோழித் தொடைப் பகுதியின் விலை கிலோவுக்கு 85-100 பாட்டிலிருந்து 95-100 பாட் வரை உயர்ந்துள்ளது.

பன்றி இறைச்சியின் விலை கிலோவுக்கு 140-150 பாட் ஆக அதிகரித்துள்ளது. மார்ச் தொடக்கத்தில் அதன் விலை 130-145 பாட் ஆக இருந்தது.

மார்ச் நடுப்பகுதியில் 3.5 முதல் 3.6 பாட் வரை விற்கப்பட்ட முட்டையின் விலை, ஏப்ரல் நடுப்பகுதியில் 3.9 முதல் 4 பாட் வரை உயர்ந்துள்ளது.

இறைச்சி வகையின் விலை உயர்ந்தபோதிலும், காய்கறி விலையில் பெரிய மாற்றம் ஏதுமின்றி நிலையாக உள்ளது. ‘கேல்’, ‘சைனீஸ் மார்னிங் குளோரி’ கீரைகளின் விலை கிலோ 35-40 பாட் என்ற அளவில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. கொத்தமல்லி ஒரு கிலோ 90 முதல் 100 பாட் வரை விற்பனையாகிறது.

உணவுப் பொருள்களின் இந்த திடீர் விலை உயர்வு, மற்ற வீட்டு உபயோகப் பொருள்களின் விலையையும் உயர்த்தக்கூடும் என்ற கவலையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்