தைப்பே: மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், தனது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த நிலக்கரி மூலமான மின் உற்பத்தியைத் தைவான் அதிகரிக்கவுள்ளது.
தைவான் அரசுக்குச் சொந்தமான முக்கிய மின் விநியோக நிறுவனமான ‘தைவான் பவர்’, மைலியாவ் அனல் மின்நிலையத்தின் நிலை 1, 3 ஆகியவை முழுவீச்சில் இயங்கத் தொடங்கியவுடன், மே மாதம் முதல் அங்கிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும் என அந்நாட்டுப் பொருளியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்தது.
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரினால் உலகளாவிய எரிசக்திச் சந்தைகள் நிலைகுலைந்துள்ளன.
இதன் காரணமாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், படிம எரிபொருளான நிலக்கரியை நாட வேண்டிய நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டுள்ளன. நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்தால் அது பேரளவு காற்று மாசினை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவில் ஜப்பான், தென்கொரியா, பங்ளாதேஷ் ஆகிய நாடுகள் மின் உற்பத்திக்காக நிலக்கரியை அதிக அளவு பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அதேபோல் ஐரோப்பாவில், போலந்து போன்ற நாடுகள் நிலக்கரி எரிவாயுவின் பயன்பாட்டை அதிகரிக்கக்கூடும்.
ஜெர்மனி, பயன்பாட்டில் இல்லாத நிலக்கரி மின் நிலையம் ஒன்றை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வாய்ப்புள்ளது.

