நியூயார்க்: அமெரிக்காவுக்கு அதிகமான வரி செலுத்துவதால் இந்தியப் பிரதமர் மோடி தம்மை நினைத்து மகிழ்ச்சி அடையமாட்டார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது புதிதாக வரி விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்த இரு நாள்களில் அவர் அந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
“பிரதமர் மோடி என்னைப் பார்க்க வந்தார். ‘சார், நான் வரலாமா’ என்றார், ‘எஸ், வாருங்கள்’ என்றேன்.
“பிரதமர் மோடி ஒரு மிகச்சிறந்த மனிதர். எங்களுக்கிடையே மிகச் சிறந்த உறவு இருக்கிறது. ஆனால், நான் விதித்துள்ள வரிகளால் திரு மோடி தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்குத் தெரியும்.
“ஆனாலும், அதிகமான வரிவிதிக்கப்பட்டதால் தற்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாகக் குறைத்திருக்கிறது,” என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.
உலகத்திலேயே ஆக அதிகமாக 50 விழுக்காட்டு வரியை இந்தியாமீது திரு டிரம்ப் சுமத்தினார். அது 2025 ஆகஸ்ட் மாதம் நடப்புக்கு வந்தது.
இரு நாள்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்த என்னால் முடியும் என்று கூறியிருந்தார்.

