லண்டன்: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் தொடங்கிய கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியில் இருந்து 1,900க்கும் மேற்பட்ட வர்த்தகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில், குறிப்பாக பார்சி வளைகுடாவில் சிக்கியுள்ளன.
தாக்குதல் நடத்தும் நாடுகளுடன் தொடர்புடையக் கப்பல்களுக்கு டெஹ்ரான் இந்த முக்கிய நீர்வழிப் பாதையை மூடியதால், அந்த நீரிணையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
நீரிணையைக் கடக்கத் தயாராக இருந்த கப்பல்கள், ராணுவப் பதற்றங்கள் காரணமாகத் தங்களின் பயணத்தை மேற்கொள்ள இயலாததால், சிக்கிக்கொண்ட பெரும்பாலான கப்பல்கள் கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத் தவிர்த்து, ஈரானுக்கு எதிரான தாக்குதலை ஆதரிக்காத இதர நாடுகளின் கப்பல்கள், பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்று டெஹ்ரான் குறிப்பிட்டது.
சம்பந்தப்பட்ட நீரிணையில் ஈரான் விதிமுறைகளை மாற்றியுள்ளதாகவும், சூழ்நிலை வழக்க நிலைக்குத் திரும்பப் போவதில்லை என்றும் ஈரானின் ராணுவப் படையின் ஒருங்கிணைந்த தலைமையகமான கதம் அல்-அன்பியாவின் பேச்சாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி தெரிவித்ததாக பெர்னாமா கூறியது.

