நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நாட்டின் முக்கியப் பிரச்சினைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என அந்நாட்டு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை (பிப்ரவரி 23) வெளியான சிஎன்என் செய்தி நிறுவனத்தின் கருத்துக் கணிப்பின்படி, திரு டிரம்ப்பின் முன்னுரிமைகள் தவறான திசையில் இருப்பதாகக் கருதுபவர்களின் விகிதம், கடந்தாண்டு இருந்த 55 விழுக்காட்டிலிருந்து தற்போது 68 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, திரு டிரம்ப் வெற்றிபெற உதவிய இளம் வாக்காளர்கள், சிறுபான்மையினர் இடையே தற்போது அதிருப்தி அதிகரித்துள்ளது.
எல்லையோரப் பாதுகாப்புக்கு 47 விழுக்காட்டினரின் ஆதரவு இருந்தாலும், மற்ற குடிநுழைவுக் கொள்கைகளுக்கு 40 விழுக்காட்டு மக்கள் மட்டுமே ஆதரவளிக்கின்றனர். பணவீக்கத்தைக் கையாள்வதில் வெறும் 32 விழுக்காட்டினரின் ஆதரவைப் பெற்றுள்ள திரு டிரம்ப், வரிவிதிப்பு விவகாரத்திலும் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார்.
உச்ச நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்புக்கு எதிராக அவர் எடுக்கும் நடவடிக்கைகள், மக்களிடையே அதிருப்தியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) நாட்டு மக்களிடம் அவர் ஆற்றிய உரைக்கு ஒரு சவாலான பின்னணியை ஏற்படுத்தியுள்ளது.

