கலெலா, வடக்கு ஹல்மஹேரா: மே 8ஆம் தேதி இந்தோனீசியாவில் டுகோனோ எரிமலை வெடித்த பிறகு, அங்கு மலையேறச்சென்ற திரு திமதி ஹெங்கின் குடும்பம் இரண்டு நாள்களாக, அவர் எரிமலைப் பகுதியில் எங்கோ உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு இருந்தது.
30 வயதான அவருக்குக்கு காயம் ஏற்பட்டுருக்கலாம் அல்லது இந்தோனீசிய மீட்புப் படையின் அதிகாரிகள் அவரை வந்தடையும் வரை அவர்களுக்கு அவர் காத்திருக்கலாம் என குடும்பத்தினர் நினைத்தனர்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை (மே 10) காலை 11 மணியளவில் தாங்கள் கேட்க விரும்பாத ஒரு செய்தியுடன் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
மலை உச்சிக்கு அருகே இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதுதான் அந்த அழைப்பின் சாரம்.
“அமைச்சின் அதிகாரிகள் பேசும்போதே எங்களுக்கு ஓரளவு புரிந்துவிட்டது. அவர் இறந்துவிட்டார் என அதிகாரிகள் நேரடியாகக் கூறாவிடினும் அதனை நாங்கள் மரணமாகத்தான் இருக்கும் என ஏற்றுக்கொண்டோம்,” என்று 30 வயதான திரு ஹெங்கின் வளர்ப்புச் சகோதரி டெசா ஓஹ் தெரிவித்தார்.
அவர் பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றுகிறார்.
திரு ஹெங்கின் குடும்பத்துக்கு அச்செய்தி பேரதிர்ச்சியாக அமைந்தது.
“உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையுடன் இருந்த எனது பெற்றோருக்கும் குறிப்பாக அவரைத் திருமணம் செய்யக் காத்திருந்த வருங்கால மனைவிக்கும் அவரது மரணச் செய்தி உறுதியானது ஏற்றுக்கொள்ளமுடியாத வகையில் கடுமையானதாகிவிட்டது,” என விவரித்தார் செல்வி டெசா ஓஹ்.
தொடர்புடைய செய்திகள்
எரிமலையில் 20 மலையேறிகள் குழுவாகச் சென்றிருந்தனர். அவர்களில் ஒன்பது பேர் சிங்கப்பூரர்கள். மற்றவர்கள் அப்பகுதியில் வாழ்ந்த இந்தோனிசியர்கள். அவர்களில் வழிகாட்டிகளும் அடங்குவர்.
வழிகாட்டிகளில் ஒருவரான ரெசா செலாங் என்பவர் நேரடியாக நடந்தவற்றை ஊடக நேர்காணலில் விவரித்தார். அப்போது, வெடிப்பின் உடனடித் தாக்கத்திலிருந்து திரு ஹெங் தப்பிவிட்டாலும் மற்ற மலையேறிகளுக்கு உதவும் நோக்கத்துடன் அவர் மீண்டும் பின்னோக்கிச் சென்றது தெரியவந்தது.
பிறருக்கு உதவும் குணம்
ஆகவே மற்றவர்களுக்கு உதவும் நல்லெண்ணத்துடன் திரு ஹெங் செயல்பட்டதால் மரணம் நேர்ந்தது என்பதை எண்ணி குடும்பத்தினர் ஆறுதல் அடைவதோடு பெருமை கொள்வதாகவும் செல்வி டெசா ஓஹ் விளக்கினார்.
பிறருக்கு உதவுதல் திரு ஹெங்கின் இயற்கையான குணம் என்பதையும் அவர் சுட்டினார். மலையேறும் குழுவுக்கு அவரே தலைமைதாங்கினார் எனவும் தெரியவந்துள்ளது.

