நாணயத்தை நிலைப்படுத்தும் நடவடிக்கையில் மியன்மாரில் பலர் கைது

நாணயத்தை நிலைப்படுத்தும் நடவடிக்கையில் மியன்மாரில் பலர் கைது

2 mins read
a858d580-5cce-4486-a389-49ee00b8dbe2
யங்கூன் வங்கியில் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்டிருக்கும் மியன்மாரின் கியாட் நாணயம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

நெய்பிடா: மியன்மாரின் ராணுவ மன்ற ஆட்சி தங்கம், அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு சொத்துச் சந்தை விற்பனை முகவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

வேகமாக வீழ்ச்சிகண்டு வரும் அதன் நாணயத்தை நிலைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கடந்த இரு நாள்களில் 35 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் கூட்டுரிமை வீடுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐவர், வெளிநாட்டு நாணய மாற்று விகிதத்தை சீர்குலைத்ததாக கைது செய்யப்பட்ட 14 பேரும் இதில் அடங்குவர் என்று அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கியாட் நாணயம் கடந்த வாரம் பெரும் சரிவைக் கண்டது. கள்ளச் சந்தையில் ஒரு டாலருக்கு 4,500 ஆக சரிந்தது என்று ஐந்து அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக கியாட்டிற்கான கள்ளச் சந்தை விகிதங்கள் மியான்மார் மத்திய வங்கியின் விகிதத்தைவிட கணிசமாக அதிகமாக உள்ளன. மத்திய வங்கி ஒரு டாலருக்கு 2,100 கியாட் என நிர்ணயித்துள்ளது.

தங்க விலையைச் சீர்குலைத்ததற்காக மேலும் 21 பேரும் கைதுசெய்யப்பட்டதாக குளோபல் நீயூ லைட் பத்திரிகை ஜூன் 3ஆம் தேதி தெரிவித்தது.

பல ஆண்டு கால ராணுவ ஆட்சி, தொற்றுநோய்ப் பரவல் போன்றவற்றால் ஏற்கெனவே நலிவடைந்துள்ள மியான்மாரின் பொருளியல், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, வெளிநாட்டு முதலீடுகள் குறைந்ததாலும், மேற்கத்திய பொருளியல் தடைகளாலும் மேலும் மோசமாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின்படி, வறுமைக் கோட்டு விகிதம் 2017ஆம் ஆண்டின் 24.8 விழுக்காட்டிலிருந்து 2023ஆம் ஆண்டில் 49.7 விழுக்காடாக கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்