பெய்ஜிங்: மியன்மார் அதிபர் மின் ஆங் ஹ்லேங் சீனாவிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
முன்னாள் ராணுவத் தலைவரான மின், மியன்மார் அரசாங்கத்தைச் சீனா அங்கீகரிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளார். மேலும் சீனாவுடனான உறவை மேலும் பலமாக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
ஐந்து நாள் பயணத்தில் திரு மின் முதல் நாளில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்தார். திரு மின்னுக்குச் சீனாவில் சடங்குபூர்வ மரியாதையும் வழங்கப்பட்டது.
சீனாவும் மியன்மாரும் எல்லைத் தொடர்பான சிக்கல்கள், அரிய வகை கனிமங்கள், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து பேச்சு நடத்தலாம் என்று கூறப்படுகிறது.
மியன்மாரின் முக்கிய வர்த்தகப் பங்காளியாகவும் முதலீட்டாளராகவும் சீனா உள்ளது. மியன்மாரின் சாலை, எண்ணெய்-எரிவாயு விநியோகம், துறைமுகம் உள்ளிட்டவற்றில் சீனாவின் பங்கு பெரிதாக உள்ளது.
சீனா மியன்மாரின் கனிம வளத்தில் அதிக ஈடுபாடு காட்டக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவுக்கு இரண்டு மாநில முதல்வர்களையும் தொழில்துறை அமைச்சரையும் அழைத்துச் சென்றுள்ளார்.
அண்மையில் திரு மின் இந்தியாவுக்கும் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து உறவைப் பலப்படுத்திக்கொண்டார்.

