நுவாகோட்: நேப்பாளம் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் நிலச்சரிவுக்குப் பிறகு, சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நேப்பாளப் பெண் ஒருவர் 10 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இது அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினரிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
நேப்பாளத்தின் நுவாகோட் வட்டாரத்தில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வந்த அந்தப் பெண், கனமழை பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரது வீடு கட்டட இடிபாடுகளாலும் களிமண் சேற்றினாலும் முற்றிலுமாக மூடப்பட்டிருந்தது.
எனினும், சனிக்கிழமை (செப்டம்பர் 5) மீட்புக் குழுவினர் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது அவர் உயிரோடு இருப்பது கண்டறியப்பட்டு பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டார்.
மீட்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பத்து நாட்கள் உணவும் தண்ணீருமின்றி சேற்றுக்குள் சிக்கியிருந்த போதிலும் அவர் உயிருடன் மீட்கப்பட்டது ஒரு பெரும் அதிசயம் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி பனிப்பாறை சரிந்துவிழுந்ததால் ஏற்பட்ட பேரிடரில் சீன, நேப்பாள எல்லையின் இருபுறமும் ஆயிரக்ணக்கானோர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் மாயமாகியுள்ளதால், சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


