காத்மாண்டு: நேப்பாளம், கற்பனை செய்ய முடியாத, கவலையளிக்கும் பேரிடரை எதிர்கொண்டுள்ளது என்று அந்நாட்டுப் பிரதமர் பலேந்திரா ஷா கூறியுள்ளார்.
நூற்றுக்கணக்கானோரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த வெள்ளத்தின் முழு பாதிப்புகளை மதிப்பிட அதிகாரிகள் திணறிவருவதாக அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 26ஆம் தேதி கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளை மிகப் பெரிய பனிப்பாறை, பாறைகள், இடிபாடுகள் ஆகியவை அடித்துச்சென்றன. அதில் 797 பேர் உயிரிழந்தனர்.
“நமது நாடு கற்பனை செய்ய முடியாத மனத்தை நொறுக்கும் இயற்கைப் பேரிடரைச் சந்தித்துள்ளது,” என்று ஷா, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
ரசுவா வட்டாரத்தில் உள்ள போட்டே கோஷி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் எத்தனை உயிர்கள் பறிபோயின, எந்தளவு பொதுச் சொத்தும் உள்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்தன என்பதை முழுமையாக அளவிடுவது மிகவும் சிரமமாகியுள்ளது என்று அவர் கூறினார்.
“சாதகமற்ற வானிலை, கரடுமுரடான பாதைகள், புதிதாக எழக்கூடிய அபாயங்கள் போன்றவை பெருஞ்சவால்களாகத் தொடர்ந்தாலும் குடிமக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்றார் ஷா.
கடும் வெள்ளத்தில் சிக்கிய குறைந்தது 3,048 பேரைக் காணவில்லை. அவர்களில் சுற்றுப்பயணிகளும் திபெத்தின் கைலாய மலைக்குப் புனித யாத்திரை மேற்கொண்டோரும் அடங்குவர்.
பலேன் என்று பரவலாக அறியப்படும் 36 வயது ‘ராப்’ கலைஞரான ஷா, பிரதமராக, சமூகங்களையும் முக்கிய உள்கட்டமைப்புகளையும் மீண்டும் கட்டியெழுப்பும் மிகப் பெரிய பொறுப்பைச் சுமப்பதாகக் கருதப்படுகிறது.
நேப்பாளின் பொருளியல் ஏற்கெனவே கடும் நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 8, 9ஆம் தேதிகளில் ஊழலுக்கு எதிராக நடைபெற்ற மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களை அடுத்து நேப்பாள அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
“ஒற்றுமை, ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகள் மூலம் தற்போதைய இக்கட்டான சூழலை வெற்றிகரமாகக் கடந்துசெல்வோம்,” என்று ஷா கூறினார்.


