ஜோகூர் பாரு சோதனைச் சாவடிக் கட்டடத்தில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 14வரை அதிகாலை 12.30 மணியிலிருந்து 3.30 மணிவரை பராமரிப்புப் பணி இடம்பெறும் என்று மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.
அக்காலகட்டத்தில் குடிநுழைவுச் சோதனைகள் தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணி நடைபெறும் நேரத்தில் பயணிகள், வாகனச் சோதனைகள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்திற்கான (பிஎஸ்ஐ) மலேசியா எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பு வியாழக்கிழமை (பிப்ரவரி 26) தெரிவித்தது.
உச்சமற்ற நேரங்களில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாகக் கடற்பாலத்தைக் கடக்கும் பயணிகளை பிஎஸ்ஐ கையாள்கிறது.
தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு அமைப்பு (MyNIISEe), ‘மைபார்டர்பாஸ்’ செயலிகளைப் பயன்படுத்தும் மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கான கியூஆர் குறியீடு அனுமதித் தடங்கள் மட்டுமே பாதிக்கப்படாது.
எல்லைச் சோதனை, குடிநுழைவு அனுமதியை விரைவுபடுத்த பயணிகள் தங்கள் பயண ஆவணங்கள் முறையாக இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். வருடிச் செல்லும் (Touch ‘N Go) அட்டைகளில் போதிய பணம் இருப்பதையும், மலேசிய மின்னிலக்க வருகை அட்டை பூர்த்திசெய்யப்பட்டிருப்பதையும் உறுதிசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிப்ரவரி 25ஆம் தேதி அதிகாலையில் பிஎஸ்ஐ சோதனைச்சாவடியின் அனைத்து தானியக்கக் கதவுகளும் செயலிழந்ததைத் தொடர்ந்து பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

