கோலாலம்பூர்: சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்களுக்காகப் புதிய காப்புறுதித் திட்டம் உருவாக்கப்படும் என்று மலேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் அறிவித்துள்ளார்.
அன்றாடம் எல்லைகடந்து வேலை செய்யும் மலேசியர்களின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாகப் புதிய திட்டம் கொண்டுவரப்படுவதாக அவர் கூறினார்.
புதிய காப்புறுதித் திட்டம் ஏறத்தாழ 400,000 மலேசியர்களுக்குப் பலனளிக்கும். ஜோகூரில் இருந்து தினமும் சிங்கப்பூர் வந்து வேலை செய்துவிட்டு நாடு திரும்பும் மலேசியர்களுக்கு, வேலை நேரத்திற்குப் பின்னரும் சமூகப் பாதுகாப்பை அந்தக் காப்புறுதித் திட்டம் வழங்கும் என்று கூறப்படுகிறது.
“வேலையிடத்திலிருந்து வீடு திரும்பும் மலேசியர்களின் பயணத்தின்போது என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும். அந்த நேரத்தில் அவர்களுக்குரிய காப்புறுதித் திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை,” என்று திரு ரமணன் ‘த ஸ்டார்’ செய்தித்தாளுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் குறிப்பிட்டார்.
“மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் வேலைக்காகச் சென்றுவரும் மலேசியர்களுக்கான காப்புறுதித் திட்டம் எதுவும் நடப்பில் இல்லை எனில், புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.
“சிங்கப்பூரில் வேலைசெய்யச் சென்றதால் ஒருவர் பாதிக்கப்பட்டார் என்ற நிலை ஏற்படக்கூடாது. மலேசியாவிலிருந்து செல்லும் ஊழியர்களுக்குத் தரமான பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து,” என்றும் அமைச்சர் ரமணன் கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், புதிய காப்புறுதித் திட்டம் தமது முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது என்றார் அவர்.
சிங்கப்பூரில் 1.18 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் வேலை செய்வதாக மதிப்பிடப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் 300,000க்கும் 400,000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான மலேசியர்கள் தினமும் கடற்பாலம் வழியாக சிங்கப்பூர் சென்று திரும்புகின்றனர்.

