கோலாலம்பூர்: புதிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் அகமது சம்சுரி மொக்தர் தெரிவித்துள்ளார்.
“புதிய எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான விவாதங்கள் சனிக்கிழமை (மார் 14) நடத்தப்பட்டது. கூட்டணியின் உச்சக்குழு ஒரு முடிவை எட்டும்,” என்றார் சம்சுரி.
தலைமைப் பொறுப்பை யார் ஏற்பார் என்பது உறுதியான பிறகு நாடாளுமன்ற நாயகரிடம் தகவல் கொடுக்கப்படும் என்றார் அவர்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக ஹம்ஸா சைனுதீன் உள்ளார்.
பெர்சாத்து கட்சியின் தலைவர் முகைதீன் யாசினுக்கும் ஹம்சாவுக்கும் இடையில் பூசல் எழுந்தது. இதையடுத்து கடந்த மாதம் 13ஆம் தேதி பெர்சாத்து கட்சியிலிருந்து திரு ஹம்ஸா நீக்கப்பட்டார். அதன்பிறகு அவரது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு கேள்விக்குறியானது.
இந்நிலையில், பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் பொதுச் செயலாளராக தாக்கியுதீன் ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அந்தப் பொறுப்பில் அஸ்மின் அலி இருந்தார். அவர் ஜனவரி 1ஆம் தேதி அப்பதவியிலிருந்து விலகினார்.

