தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்லீரல் புற்றுநோய் மீண்டும் ஏற்படுவதைக் கணிக்கும் புதிய செயல்முறை

2 mins read
சிங்கப்பூர் ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்
b3d11d31-c6e3-4bdd-8151-c3d84bbfe069
‘நேச்சர்’ சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் இணையாசிரியர் டாக்டர் ஜோ இயோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கல்லீரல் புற்றுநோய் மீண்டும் ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கும் புதிய செயல்முறையை உருவாக்கியுள்ளனர்.

‘டைம்ஸ் ஸ்கோர்’ என்று அழைக்கப்படும் இந்தச் செயல்முறை கல்லீரல் கட்டிகளில் நோயெதிர்ப்பு ஆற்றல்கொண்ட உயிரணுக்கள் காணப்படும் இடம் குறித்த தகவல்களை ஆய்வு செய்கிறது.

‘ஏ*ஸ்டார்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு அமைப்பின் மூலக்கூறு, உயிரணு உயிரியல் கழகமான ‘ஐஎம்சிபி’, சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதை உருவாக்கினர்.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் 100,000 பேரில் 20க்கு மேற்பட்டோர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இங்கு ஆண்களிடையே வழக்கமாகக் கண்டறியப்படும் நான்காவது புற்றுநோயாகவும் மரணம் ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது புற்றுநோயாகவும் இது விளங்குகிறது.

புற்றுநோய் உயிரணுக்கள் போன்ற பாதிக்கப்பட்ட உயிரணுக்களை இயற்கையான நோயெதிர்ப்பு ஆற்றல்கொண்ட உயிரணுக்கள் அழிக்கின்றன. இத்தகைய உயிரணுக்களின் எண்ணிக்கை ஒருவரது உடலில் குறைவாக இருந்தால் மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம்.

“நோயெதிர்ப்பு ஆற்றல்கொண்ட உயிரணுக்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கிடாமல், அவை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உயிரணுக்களிலிருந்து எவ்வளவு அருகில் அல்லது தொலைவில் அமைந்துள்ளன என்பதை ஆய்வு செய்கிறோம்,” என்றார் டாக்டர் ஜோ இயோங்.

இவர் இந்த ஆய்வில் பங்கேற்ற இரு அமைப்புகளிலும் முதன்மை ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். மேலும், இதன் தொடர்பில் ‘நேச்சர்’ சஞ்சிகையில் வெளியான ஆய்வுக்கட்டுரையின் இணையாசிரியருமாவார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உயிரணுக்களைத் தாக்கி அழிக்கக்கூடிய நிலையில் நோயெதிர்ப்பு ஆற்றல்கொண்ட உயிரணுக்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதன் மூலம் ‘டைம்ஸ் ஸ்கோர்’ செயல்முறை, மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியத்தை ஏறத்தாழ 82 விழுக்காடு துல்லியமாகக் கணிக்கிறது.

கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற நோயாளிகளில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினருக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர் இயோங் கூறினார்.

துல்லியமான கணிப்பு முறையால் மருத்துவர்கள், அபாயத்துக்கு ஆளாகக்கூடிய நோயாளிகளை முன்கூட்டியே அடையாளம் காண முடியும் என்றார் அவர். பின்னர் நோயாளிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, சிகிச்சை முறையை வடிவமைக்க அது உதவும்.

இடர் நேரும் சாத்தியத்தை முன்கூட்டியே கண்டறிவதால் நோயாளிகளின் மருத்துவக் கட்டணமும் மிதமாகக்கூடும் என்றார் டாக்டர் இயோங்.

குறிப்புச் சொற்கள்