கோலாலம்பூர்: தனது ஆணையம் நடத்தும் விசாரணையில் எந்தவிதமான அரசியல் நெருக்கடியும் அழுத்தமும் இல்லை என்று மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
“ஊழல் தடுப்புப் பிரிவு, அரசியல் ரீதியாக வரும் கட்டளைகளை ஏற்காது. சுதந்திரமாக இயங்கும் ஐந்து அமைப்புகள் கீழ் நாங்கள் செயல்படுகிறோம்,” என்று திரு அஸாம் கூறினார்.
ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு உள்ள பெரிய சவால், கிடைக்கும் ரகசியத் தகவல்களுக்குச் சரியான ஆதாரங்களைத் திரட்டுவதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் வெளிப்படையாகச் செயல்படவில்லை என்று கூறுபவர்கள், எங்களது கண்ணியமான செயலைக் கண்டு அஞ்சுபவர்களே,” என்றும் திரு அஸாம் கூறினார்.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) இரவு ஊழல் தடுப்பு ஆணையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் திரு அஸாம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் இக்கருத்துகளைக் கூறினார்.
நிகழ்ச்சியில் ஆணையம் குறித்து ஒரு 13 நிமிடக் காணொளி வெளியிடப்பட்டது. அதில் அந்த அமைப்பு எப்படிச் செயல்படுகிறது, ஊழலைத் தடுக்க என்ன முயற்சிகளை மேற்கொள்கிறது போன்ற தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

