பிலிப்பீன்சில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 868,540 என அதிகரிப்பு

பிலிப்பீன்சில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 868,540 என அதிகரிப்பு

1 mins read
88aa4035-ba2c-4acc-92c4-ffacec72f3a4
சிறுவர்கள் பிலிப்பீன்சில் நீருக்கடியில் உள்ள சுரங்கத்தில் வேலைசெய்வதை மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. - படம்: த ஸ்டார்

மணிலா: பிலிப்பீன்சில் 5 முதல் 17 வயதுக்குட்பட்ட உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 0.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிலிப்பீன்ஸ் புள்ளியியல் ஆணையம் (PSA) புதிய தரவுகளை அண்மையில் வெளியிட்டது.

அதன் விவரங்கள் மலேசிய ‘த ஸ்டார்’ ஊடகத்தில் சனிக்கிழமை (ஜூலை 18) செய்தியாக வந்தன.

அதன்படி பிலிப்பீன்சில் 2024ல் 861,450 ஆக இருந்த குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டில் 868,540 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டின் வாழும் மொத்தக் குழந்தைகளில் 3.1 விழுக்காட்டினர் உழைக்கும் குழந்தைகள் ஆவர். இது 2024ஆம் ஆண்டில் இருந்த 2.7 விழுக்காட்டை விட அதிகம்.

இருப்பினும், 2023ல் பதிவான 3.5 விழுக்காட்டை ஒப்பிடுகையில் 2025ன் எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளது.

அங்குள்ள குழந்தைத் தொழிலாளர்களில் 61.6 விழுக்காட்டினர் ஆண் சிறுவர்கள் ஆவர். மேலும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள்.

தொடர்ந்து நீடிக்கும் வறுமை, உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள், கொவிட்19 பெருந்தொற்றின் விளைவால் நீடித்துவரும் பொருளியல் தாக்கம் ஆகியன இந்த அதிகரிப்புக்குக் காரணங்கள் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இத்தகைய நெருக்கடிகளால் குடும்ப வருமானத்தை ஈடுகட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்குப் பல குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்குழந்தைகள்மனித உரிமைபெற்றோர்வறுமைதொழிலாளர்வயதுசிறுவர்சிறுவன்