மழலையர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கி இரண்டே மாதங்கள்தான் ஆகியுள்ளன.
அதற்குள் இரண்டு முறை குழந்தையின் பள்ளிப்பையில் மனிதக்கழிவை ஆசிரியர் வீடுவரை தூக்க வைத்துவிட்டதாக தாய்லாந்தின் பிச்சிட் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியுள்ளார்.
மகளுக்காக வேறொரு பள்ளியைத் தற்போது தேடிவரும் அந்தத் தாயார், உள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் இதுகுறித்து புகாரும் அளித்துள்ளார்.
குழந்தை தனது கால்சட்டையில் மலம்கழித்த காரணத்தால், ஆசிரியர் இவ்வாறு செய்ததாக ‘சேனல் 3 நியூஸ்’ நிறுவனம் தெரிவித்திருந்தது.
பள்ளிப்பையில் புத்தகங்களுடன் குழந்தையின் உடைகளில் அந்த மனிதக்கழிவு சுற்றிவைக்கப்பட்டதைப் பெற்றோர் கண்டுபிடித்தனர்.
மனிதக்கழிவை அந்த ஆசிரியர் ஏன் கழிவுத்தொட்டியில் போடவில்லை என்று குழந்தையின் குடும்பத்தார் குழம்பினர்.
அதற்குப் பதிலாக, குழந்தையின் உடைகளில் சுற்றி, அதைப் பள்ளிப்பையில் ஏன் திணிக்கவேண்டும் என்ற கேள்வியும் அவர்களுக்குள் எழுந்தது.
இதுகுறித்து அக்குடும்பம் மற்ற பெற்றோர்களிடம் கேட்டறிந்ததில் தங்களின் பிள்ளையின் பள்ளிப்பையிலும் இவ்வாறு ஆசிரியர் வைத்திருக்கிறார் என்று அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இதனுடன், பிள்ளைகளுக்குச் சரியான பராமரிப்பு வழங்க ஆசிரியர்கள் தவறியதாகவும் கூறப்படுகிறது.
பள்ளிக்குச் செல்ல ஆவலுடன் இருந்த தம் மகள் தற்போது பயப்படுவதாகப் புகார் அளித்த அந்தத் தாயார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கூறப்படும் புகார்கள் தொடர்பில் அப்பகுதி நகராட்சி விசாரணை மேற்கொள்ள, குழு ஒன்றை அமைத்துள்ளது.
அத்துடன் அந்த ஆசிரியரின் நடத்தையைக் கண்காணிக்குமாறு பள்ளிக்கு அறிவுறுத்தியுள்ளது.

