சென்னை: பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் அறிவித்தார்.
சனி, ஞாயிறு மற்றும் ரமலான் பண்டிகையால் திங்கள்கிழமை வரை சட்டமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை (ஏப்ரல்1) காலை 9.30 மணிக்கு மீண்டும் மன்றம் கூடியது.
கேள்வி நேரத்தின்போது பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், “கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும். ரூ. 6.50 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயாராக உள்ளது,” என்றார்.
“சின்னமுட்டலுவில் 12 மீ வரை பூமியில் கூழாங்கல் கலந்த மண் உள்ளது. சிதைவுற்ற மணலும் காணப்படுவதால் நீர்தேக்கம் அமையும் சாத்தியக்கூறுகள் இல்லை,” என்றார் அவர்.
மேலும், காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து அதிமுக உறுப்பினா் சி.விஜயபாஸ்கா் அளித்த கவன ஈா்ப்பு மீது விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கு நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் பதில் அளிக்கவிருக்கிறார்.

