அமெரிக்காவில் இந்திய உணவுகளுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு.
அந்நாட்டின் முக்கியமான நகரங்களில் பல இடங்களில் இந்திய உணவகங்களைக் காணமுடியும்.
பரபரப்பாக இயங்கும் நியூயார்க்கின் மத்திய வட்டாரத்தில் தற்போது தென்னிந்திய உணவுகளை வழங்கும் ‘செம’ உணவகம் அப்பகுதி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
அந்த உணவகத்தில் சமையல் நிபுணராக உள்ளார் தமிழ்நாட்டின் நத்தம் பகுதியைச் சேர்ந்த விஜய குமார்.
அவரது கைவண்ணத்தால் செம உணவகம் கடந்த ஆண்டு உணவகங்கள் எல்லாம் ஆஸ்கார் விருதாகப் பார்க்கும் மிச்சலின் விருதை வென்றது.
ஏழ்மையின் காரணமாக பொறியாளர் படிப்பை படிக்கமுடியாமல் சமையல் படிப்பைப் படித்தேன், இப்போது உலக அளவில் தமிழ் உணவுகளைக் கொண்டுசேர்ப்பது மகிழ்ச்சி தருவதாக விஜய குமார் கூறினார்.
கிராமத்து பின்னணியில் இருந்து வந்த தமக்கு தனது தாத்தா தான் சமையல் குரு என்றார் 42 வயது விஜய குமார்.
செம உணவகத்தில் கரண்டிகள் மூலம் சாப்பிடக்கூடாது, கையில் எடுத்து தான் சாப்பிட வேண்டும், அது தமிழ் கலாசாரத்தை மக்களிடம் எடுத்துக்கூறுவதாக உணவகத்தின் உரிமையாளர் கூறினார்.
மக்கள் மனதில் இவ்வளவு சீக்கிரமாக ஒரு இடத்தைப் பிடிப்போம் என்று எதிர்பார்க்கவில்லை, தொடர்ந்து இந்திய உணவுகளை சுவையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் தருவோம் என்று விஜய குமார் தெரிவித்தார்.