நியூயார்க்: இந்தியாவுடனான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வுகளை எட்டக்கூடிய விரிவான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த மறுநாள், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபையில் உரையாற்றியபோது திரு ஷரிஃப் இவ்வாறு கூறினார்.
“தெற்காசியாவுக்குக் கருத்துவேறுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் திறனுடைய தலைவர்கள்தான் தேவை, அவற்றை ஏற்படுத்துபவர்கள் அல்லர்,” என்றார் அவர்.
அதேசமயம், அதிபர் டிரம்ப் தமது அரசதந்திர அணுகுமுறையால் இந்தியாவுடனான அண்மைச் சண்டையில் அமைதியை ஏற்படுத்தியமைக்குப் பாராட்டையும் திரு ஷரிஃப் பதிவுசெய்தார்.
அதிபர் டிரம்ப்பைச் சந்தித்தபோது பாகிஸ்தான் பிரதமருடன் அந்நாட்டு ராணுவத் தளபதி ஹசிம் முனிரும் சென்றிருந்தார். இந்தியாவுடனான சண்டையை முடிவிற்குக் கொண்டுவந்த திரு டிரம்ப் அமைதிக்கான நோபெல் பரிசுக்குத் தகுதியானவர் எனவும் தளபதி முனிர் குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தானுடனான சண்டையை அதிபர் டிரம்ப் நிறுத்தியதாகக் கூறி வருவதை இதுவரையிலும் இந்தியா ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.