கோத்தா பாரு: புதிய எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான நியமனம் குறித்து கட்சிக்குள் ஆலோசனை நடைபெற்றாலும், இதுவரை எந்த வேட்பாளரையும் இறுதி செய்யவில்லை என்று பாஸ் தெரிவித்துள்ளது.
பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹாசான் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாகக் கட்சி கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டதாகவும், சிலர் வேட்பாளர்களாக முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குப் பிறகும் இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இருப்பினும் கட்சிக்குள் ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் யார் புதிய எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்ற முடிவு இன்னும் எட்டப்படவில்லை. சிலர் வேட்பாளர்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் அடுத்த நாடாளுமன்ற அமர்வு தொடங்குவதற்கு முன்பு தீர்மானிக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

