அமெரிக்கப் போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி மறுப்பு

அமெரிக்கப் போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி மறுப்பு

2 mins read
இலங்கையின் நடுநிலையைக் கட்டிக்காக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது: அதிபர்
21f015ec-0aae-467e-bc0e-d0b5f8cc2ab1
தமது நாட்டின் நடுநிலையைக் கட்டிக்காக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார். - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: இரண்டு போர் விமானங்களை இலங்கையில் நிறுத்திவைக்க அமெரிக்கா கேட்டுக்கொண்டபோது, அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக அதிபர் அனுர குமார திசாநாயக்க வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமது நாட்டின் நடுநிலையைக் கட்டிக்காக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிப்பௌட்டியின் ராணுவத் தளத்தில் இருந்து இலங்கையின் தென்பகுதியில் உள்ள மத்தல விமான நிலையத்துக்கு இரண்டு போர் விமானங்களை இடமாற்ற அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.

அமெரிக்காவின் கோரிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி விடுக்கப்பட்டதாக அதிபர் திசாநாயக்க கூறினார்.

இலங்கையின் நிலம் போருக்குப் பயன்படாமல், போரிடும் எந்த நாட்டுக்கும் ஆதரவாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்து நாட்டின் நடுநிலையைக் காக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை அதிபர் விளக்கினார்.

அண்மையில் இந்தியப் பெருங்கடலில், இலங்கையின் கரையோர வட்டாரத்தில் ஈரானியக் கப்பல் ஒன்று அமெரிக்க நீல்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டது. போரின் விளைவுகள் இலங்கையையும் நெருங்கிவிட்டதை அச்சம்பவம் வெளிப்படுத்தியது.

மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதிவரை அவ்விரு விமானங்களையும் மத்தல விமான நிலையத்தில் அமெரிக்கா நிறுத்திவைக்க அனுமதி கேட்டதாக அதிபர் தெரிவித்தார்.

ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த இலங்கையைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டதா என்பதுபற்றி அதிபர் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின்படி, அதன் வான்எல்லைகளை எந்த நாட்டுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்காது என்று அந்நாட்டு ராணுவம் ஏஎஃபி ஊடகத்திடம் உறுதிப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்