மணிலா: பிலிப்பீன்சின் பலாவான் தீவுக்கு அருகில் புதன்கிழமை இரவு பயணம் செய்த படகில் நடந்த தீ விபத்தில் ஐவர் மரணமடைந்தனர், 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று அந்நாட்டுக் கடலோரக் காவற்படையினர் (பிசிஜி) வியாழக்கிழமை (செப்டம்பர் 10) தெரிவித்தனர்.
பலாவான் தீவில் கொரோன் என்ற கடல் பகுதியில் தீப்பிடித்த ‘எம்வி ஜுன் அஸ்டர்’ என்ற அந்தப் படகில் இருந்து 43 பயணிகள் அன்றிரவு காப்பாற்றப்பட்டனர் என்றும் அவர்கள் கூறினர்.
பிலிப்பீன்ஸ் கடலோரக் காவற்படை வெளியிட்ட காணொளியில் படகு தீப்பற்றி எரிவதையும் அவசர உதவிப் படையினர் உயிரிழந்தோரின் உடல்களை மீட்பதையும் காணமுடிந்தது.
பிசிஜியின் பேச்சாளர் நவொமி கயப்யாப் அப்படகின் விவரப் பட்டியலின்படி, மொத்தம் 117 பயணிகளும் 17 ஊழியர்களும் இருந்ததாகக் கூறினார்.
அதன்படி, இதுவரை 80க்கும் மேற்பட்டோரின் தகவல்கள் இல்லை என்பதால் அவர்களைக் காணவில்லை என்று தெரிவித்தார். மீட்புப் பணிகள் நடந்தவருவதால் அந்த எண்ணிக்கை மாற்றம் அடையலாம் என்பதையும் அவர் விளக்கினார்.
அந்தப் படகு தலைநகர் மணிலாவின் பசெகோ பகுதியிலிருந்து கொரோன் நோக்கிப் பயணம் செய்ததாகவும் அப்பேச்சாளர் சொன்னார்.
தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை தொடர்கிறது.

