மணிலா: பெண் அதிகாரிகளுக்கான பதவி நியமனத்தை 10 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காட்டுக்கு உயர்த்த பிலிப்பீன்ஸ் தேசியக் காவல்துறை (PNP) பரிசீலனை செய்துவருகிறது.
அந்நாட்டில் அமைதி, நன்னடத்தை போன்றவற்றை நிலைநாட்ட பெண்களின் பங்கு அதிகரித்துவரும் நிலையில் இந்தத் தேவை ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதம் கொண்டாடப்படும் தேசிய பெண்கள் மாதத்தை முன்னிட்டு பிலிப்பீன்ஸ் காவல்துறை இந்தப் பரிந்துரையை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) முன்வைத்தது.
புரிந்துணர்வு, சமரசம் செய்யும் தன்மை போன்ற நற்குணங்களுடன் பிலிப்பீன்ஸ் காவல்துறையில் பெண்கள் தலைமைத்துவப் பணிகளில் செயல்படும் முக்கியத்துவம் குறித்தும் அத்துறை பதிவுசெய்துள்ளது.
பிலிப்பீன்ஸ் காவல்துறைத் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அதன் மொத்த படைபலத்தில் 22.08 விழுக்காடு பெண்கள் பணியாற்றுகின்றனர்.
அதாவது மொத்தமுள்ள 236,493 அதிகாரிகளில் 52,223 பேர் பெண்கள். அவர்களில் 43,847 சீருடையணிந்த காவலர்களும் 8,098 சீருடை அணியாத ஊழியர்களும் 278 பயிற்சிபெற்றுவரும் அதிகாரிகளும் அடங்குவர்.
“வளரும் நம் கலாசாரத்தைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். பாலினத்தைப் பொறுத்து அல்லாமல் திறனைக் கொண்டும் கடமை உணர்வை வைத்தும் நமது காவல்படை சேவையாற்றுகிறது,” என்று காவல்துறைத் தலைவர் ஜெனரல் மெலன்சியோ சி. நார்டடெஸ் அறிக்கை ஒன்றில் கூறினார்.
பிலிப்பீன்ஸ் காவல்துறைத் தலைவர், படையில் பெண் அதிகாரிகள் பதவி நியமனத்தை இரட்டிப்பாக்கி நிரந்தரமாக 20 விழுக்காடு ஆக்கிட முனைந்து வருகிறார்.

