துபாய்: காப் 28 உச்சநிலை மாநாடு துபாயில் நடைபெற்று வருகிறது. பூமியின் வெப்பநிலையைக் குறைக்க பல நம்பிக்கையூட்டும் அறிவிப்புகள் அதில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த 2 வார பேச்சுவார்த்தையில், உண்மையான பிரச்சினையான புதைபடிவ எரிபொருள் பற்றிய விவரத்தையும் மாநாட்டின் இறுதியில் வெளியாகவிருக்கும் காப் 28 அறிக்கையையும் இந்த கவர்ச்சியான அறிவிப்புகள் திசைதிருப்புகின்றன என்று பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இவ்வாண்டின் மாநாட்டில் இதுவரை பின்வரும் நன்கொடைகளின் உறுதிமொழிகளும் அறிவிப்புகளும் செய்யப்பட்டுள்ளன.
இழப்பு மற்றும் பாதிப்பு நிதி
முதல்நாள் பேச்சுவார்த்தையில், இழப்பு மற்றும் பாதிப்பு நிதி அறிமுகம் செய்யப்பட்டது. பருவநிலை மாற்றத்தால் எளிதில் பாதிப்படையும் நாடுகளுக்கு உதவிட இந்த நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2 வரை சுமார் $656 மில்லியன் அமெரிக்க டாலர் இந்நிதிக்கு உறுதியளிக்கப்பட்டதாக இயற்கை வளங்கள் பாதுகாப்பு மன்றம் என்ற சுற்றுச் சூழல் சட்ட வடிவமைப்புக் குழு கூறியுள்ளது.
வரலாற்றின்படி கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றுவது வளர்ந்துவரும் நாடுகள்தான். அந்நாடுகள் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய தேவைப்படும் என்று இதற்குமுன் கூறியிருந்த $100 பில்லியன் அமெரிக்க டாலரைவிட மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தொகை மிகக் குறைவாகும்.
புதுப்பிப்பதை மூன்று மடங்காக்குதல்
உலகெங்கிலும் மறுபயனீட்டுக்கு புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை 2030க்குள் மும்மடங்காக்கி எரிசக்தியின் ஆற்றல் திறன்களை ஆண்டுதோறும் இரட்டிப்பாக்க 116 நாடுகள் உறுதியளித்துள்ளன.
சுமார் 80 விழுக்காடு கரியமிலவாயு வெளியேற்றத்துக்கு காரணமான ஜி20 நாடுகள், கடந்த செப்டம்பர் மாதம் புதுப்பிக்கப்படும் எரிசக்திகான ஏற்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
புதைபடிவ எரிபொருள்
நிலக்கரியற்ற கூட்டமைப்பில் இணைந்த பிறகு, வளிமண்டலத்தைச் சென்றடையக்கூடிய வாயுவை தடுக்காத தற்போது செயல்படும் நிலக்கரி ஆலைகளைப் படிப்படியாக மூடப்போவதாக அமெரிக்கா டிசம்பர் 2ல் அறிவித்துள்ளது
உலகளாவிய கரியமில வாயு உமிழ்வில் நிலக்கரியால் செயல்படக்கூடிய எரிசக்தி ஆலைகள் 2022ல் புதிய உச்சத்தை தொட்டன. அந்த வகையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அடுத்து அமெரிக்கா மூன்றாம் நிலையில் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.
மேலும் 40 விழுக்காடு உலகளாவிய உற்பத்தியை பிரதிநிதிக்கும் 50 எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் 2050க்குள் அவற்றின் செயல்பாடுகளில் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்தப்போவதாக உறுதியளித்துள்ளன.
அணுசக்தியை மும்மடங்காக்குதல்
அமெரிக்க தலைமையில் 20 நாடுகள் உலகின் அணுசக்தி சார்ந்த எரிசக்தி பயன்பாட்டுத் திறனை மும்மடங்காக்க அழைப்பு விடுத்துள்ளன.
2011ல் ஜப்பானில் நடந்த நிலநடுக்கமும் சுனாமியும் (ஃபுக்குஷிமா) அணுசக்தி ஆலைகளின் பயன்பாட்டை சந்தேகத்துக்குள்ளாக்கினாலும், அத்தகைய ஆலைகள் எவ்வித கரியமில வாயுவையும் வெளியேற்றுவது இல்லை.
புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியின் தேவை அதிகரிக்கும் அளவுக்கு ஈடுசெய்ய புது அணுசக்தி மின்னிலையங்கள் உருவாக பல ஆண்டுகள் தேவைப்படுகிறது என்று நிபுணர்கள் கருத்துரைக்கின்றனர்.
உணவும் விவசாயமும்
உணவுக்கும் விவசாயத்துக்கும் தங்களது தேசிய பருவநிலை திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்போவதாக 130 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
எவ்வித பிணைப்பும் இல்லாத இந்த அறிவிப்பை பார்வையாளர்கள் வரவேற்றுள்ளனர். ஏனெனில் செயற்கையாக மனிதர்களால் வெளியேற்றப்படும் கரியமில வாயுவில் மூன்றில் ஒரு பங்குக்கு உணவு தயாரிப்பு காரணமாகும்.
சுகாதாரமான எதிர்காலம்
பருவநிலை செயல்பாடுகளின் மையமாக சுகாதாரத்தை முன்னிறுத்தி 120 நாடுகள் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
கடுமையான வெப்பம், காற்றுமாசு, தொற்றுநோய் போன்ற சுகாதாரத்தைப் பாதிக்கக்கூடியவற்றை எதிர்கொள்ள அரசாங்கங்களுக்கு அறைகூவல் விடுக்கும் விதமாக அந்த உடன்படிக்கை அமைந்திருக்கிறது.
ஆண்டுக்கு 9 மில்லியன் மக்கள் காற்றுமாசு போன்ற தூய்மைக்கேட்டினால் மாண்டு போகின்றனர் என்றும் 189 மில்லியன் மக்கள் மிகவும் கடுமையான வானிலை சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்படைகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் பருவநிலை முதலீட்டு நிதி
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், 30 பில்லியன் அமெரிக்க டாலரை ஒரு புதிய தனியார் பருவநிலை முதலீட்டு நிதிக்கு ஒதுக்கியதாகத் தெரிவித்துள்ளது.
எண்ணெய் வளமிக்க காப்28 ஏற்பாட்டாளரான ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், அந்த நிதிக்கு அல்டெரா என்று பெயரிட்டுள்ளது. வளர்ந்துவரும் நாடுகளின் பருவநிலை சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்த முயலும் இந்நிதி வருகின்ற 2030க்குள், 250 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய வங்கிகள் மௌனம்
உலகில் செயல்படும் 10 முக்கிய மேம்பாட்டு வங்கிகள் காப் 28 மாநாட்டில் பருவநிலை முயற்சிகளுக்கு உதவியளிக்க உறுதியளித்துள்ளன. ஆனால் புதைபடிவ எரிபொருள் திட்டங்களுக்கு வழங்கப்படவிருந்த நிதிகளை நிறுத்துவதுபற்றிய எந்த அறிவிப்பையும் அவை வெளியிடவில்லை என்று ராய்ட்டர்ஸ் ஓர் ஆவணத்தைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளது.
உலக வங்கியை உள்ளடக்கிய அந்த வங்கிகளின் குழு, வாழக்கூடிய ஒரு பூமியை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு மிக விரைவாக குறைந்துவருகிறது என்று துபாயின் மாநாட்டில் வெளியிடப்படவுள்ள அறிவிப்பில் கூறப்போவதாகத் தெரிகிறது.
பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்ற அறைகூவல் ஓங்கி ஒலிக்கின்றது. வரலாறு காணாத அளவில் பருவநிலை பாதிப்புகள் நடந்த பின்பும் நிதி உதவியாக 2022ல் 61 பில்லியன் அமெரிக்க டாலரை வங்கிகள் வழங்கியது தேவைப்படும் தொகையில் ஒரு சிறிய அளவு என்பது வருத்தமளிக்கிறது.