இஷிகாவா: மத்திய ஜப்பானில் உள்ள இஷிகாவா மாகாணம் 2024ஆம் ஆண்டில் புத்தாண்டு தினத்தன்று நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்படைந்தது.
அந்த ஆண்டு முழுவதும் அப்பகுதி பெருமழையால் அவதியுற்றது. எனவே அந்த மாகாணத்துக்குக் குறிப்பாக நொட்டோ தீபகற்பப் பகுதிக்குப் புத்துயிர் ஊட்டும் நோக்கத்துடன் அங்குள்ள நொட்டோ சத்தோயாமா விமான நிலையத்துக்கு வேறு பெயர் சூட்டப்படும் என்று வியாழக்கிழமை (மே 14) நகராட்சி மன்றம் அறிவித்துள்ளது.
உலகில் ஒரு கற்பனைப் பாத்திரத்தின் பெயரைக் கொண்ட ஒரே விமான நிலையமாக அது திகழும் என்று நகராட்சி மன்றம் தெரிவித்தது.
பேரிடரால் பாதிப்படைந்த அந்த மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தின் புதிய பெயர், ‘நொட்டோ சத்தோயாமா பொக்கிமொன் வித் யூ’ என்று சூட்டப்பட்டது.
வாஜிமா நகரில் உள்ள அந்த விமான நிலையத்தின் புதிய பெயர், இவ்வாண்டு ஜூலை 7ஆம் தேதி முதல் 2029ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும்.

