பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் கட்டுக்கதைகளைக் கட்டமைப்பதாக சீனா வெள்ளிக்கிழமை (ஜூலை 17) குற்றஞ்சாட்டியது.
சீனாவின் பதிலடிக்கு முன்பாக அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை பொது உரையாற்றினார். அதில் சீனா அமெரிக்காவின் தேர்தல் தரவுகளைக் களவாடிவிட்டதாகக் குறை கூறியிருந்தார்.
அமெரிக்க அதிபர்களின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாகும். அதற்கு இடையில் இரண்டு ஆண்டுகளில் மத்திய கால தேர்தல் நடத்தப்படும். அதில் அதிபர் காங்கிரசிலும் சட்டமன்றத்திலும் எந்த அளவு ஆதரவு உறுப்பினர்களை வைத்துள்ளார் என்பது தெரியவரும்.
இவ்வாண்டு நவம்பர் மாதம் அத்தேர்தல் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. பலமுறை அதிபர் டிரம்ப் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இனி வரப்போகும் முடிவுகளையும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றே பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.
“அமெரிக்கத் தரப்பு செய்துள்ள புகார்கள் முழுவதும் கட்டுக்கதையாகும். அவை அடிப்படையற்ற ஆதாரமில்லாத தீங்கிழைக்கும் அவதூறுகளாகும்,” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அமெரிக்கத் தேர்தல் குறித்து எவ்வித விருப்பமும் சீனாவுக்கு இருந்ததில்லை. அவற்றில் எந்த நேரத்திலும் தலையிட்டதில்லை என்பதையும் அவர் தெரிவித்தார். அதோடு “பல நாடுகளின் உள்விவகாரங்களில் எந்த நாடு அடிக்கடி தலையீடு செய்கிறது என்பது அனைத்துலக சமூகத்துக்குத் தெளிவாகத் தெரியும்,” என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

