கோலாலம்பூர்: பத்து ஆண்டுகளாக நீடித்து வந்த இடமாற்றப் பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து, நல்லெண்ணத்தின் அடையாளமாக, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வியாழக்கிழமை (மார்ச் 27) தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகக் குழுவைச் சந்தித்தார்.
ஜேக்கல் டிரேடிங் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் மதானி பள்ளிவாசலுக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பிறகு, தற்போது அக்கோயில் உள்ள இடத்தில், பிரதமர் அன்வார், கோயில் நிர்வாகக் குழுவினரைச் சந்திக்கும் யோசனையைக் கூறினார்.
சிறி்து நேரம் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, தற்போதைய விவகாரத்தில் ஓர் இணக்கமான தீர்வு காண மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாக அன்வார் உறுதியளித்தார் என்று கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் கே. பார்த்திபன் தெரிவித்தார்.
“நாம் அனைவரும் ஒரு குடும்பமாக ஒற்றுமையாக வாழ்வதன் மூலம் ஒன்றுபட வேண்டும் என்றும், அரசாங்கம் அனைவரின் நலனையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“இறுதியில் எல்லாம் நல்லிணக்கத்துடன் நடந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று விழாவிற்குப் பிறகு கோவிலில் சந்தித்தபோது திரு பார்த்திபன் மலாய் மெயில் ஊடகத்திடம் கூறினார்.
சில தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி, பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை திரு அன்வார் முன்னர் உறுதிப்படுத்திய பிறகு, விழாவில் வியாழக்கிழமை கலந்துகொண்டார்.
கோயில் பகுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநில செய்தி நிறுவனமான பெர்னாமா மட்டுமே நிகழ்வில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டது.
ஜாலான் முன்ஷி அப்துல்லாவில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், எவ்வித கலவரமும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கையாகவும் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டிருப்பதை மலாய் மெயில் கவனித்தது.
தொடர்புடைய செய்திகள்
காலை 11.30 மணியளவில் நிகழ்வு முடியும் வரை எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.
நில உரிமையாளரான ஜேக்கல் டிரேடிங் தனது நிலத்தில் ஒரு பள்ளிவாசலைக் கட்ட முன்மொழிந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கோயில் அனைவருக்கும் ஏற்புடைய வேறோர் இடத்திற்கு மாற்றப்படும் என்று கோலாலம்பூர் நகர மன்றம் முன்பு உறுதிப்படுத்தியது.
புதிய இடம் தற்போதைய இடத்திலிருந்து கிட்டத்தட்ட 50 மீட்டர் தொலைவில் இருக்கும் என்றும் மேலும் இடமாற்ற செயல்முறை தொடங்கும் வரை கோயில் தொடர்ந்து தற்போதைய இடத்திலேயே செயல்படும் என்று நகர மன்ற அதிகாரிகள் கூறியிருந்தனர்.
2014ஆம் ஆண்டு ஜேக்கல் டிரேடிங் நிறுவனம், கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல், கோலாலம்பூர் நகர மன்றத்திடமிருந்து சம்பந்தப்பட்ட நிலத்தை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

