பிரிட்டனில் வீடற்றோர்க்கு உதவ சம்பளத்தில் ஒரு பகுதியை நன்கொடை வழங்கும் பிரதமர்

பிரிட்டனில் வீடற்றோர்க்கு உதவ சம்பளத்தில் ஒரு பகுதியை நன்கொடை வழங்கும் பிரதமர்

2 mins read
102fca9f-e984-4600-9638-0b80eae64ae9
ஜூலை 20ஆம் தேதி பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்பதற்குச் சில மணி நேரம் முன்பாக வீடற்றோரைச் சந்தித்துப் பேசிய திரு ஏண்டி பர்ன்ஹாம் (இடது). - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

லண்டன்: லண்டனில் தெருக்களில் தூங்கும் வீடற்றோர்க்கு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் உதவி வழங்கும் புதிய திட்டங்களை பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அறிவித்துள்ளார். வீடற்ற நிலையை ஒழிக்கத் தமது சம்பளத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கப்போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

திரு ஸ்டார்மருக்குப் பதிலாக ஜூலை 20ஆம் தேதி பிரிட்டனின் பிரதமராகத் திரு பர்ன்ஹாம் பொறுப்பேற்றுக்கொண்டார். தெருக்களில் தூங்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகத் தமது முதல் நாளிலேயே அவர் உறுதியளித்தார். அந்த இலக்கை நோக்கிய திட்டத்தின் ஓர் அங்கமாக, இங்கிலாந்து முழுவதும் இந்தக் குளிர்காலத்தில் அவசரகாலத் தங்குமிடங்களும் நீண்டகால வீட்டுவசதி ஆதரவும் வழங்கப்படவுள்ளன.

இதன்கீழ், வீடற்றோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகளுக்கு, அதிகரிக்கப்பட்ட 442 மில்லியன் பவுண்ட் (S$764.9 மில்லியன்) நிதியில் பெரும்பகுதி ஒதுக்கப்படும்.

திரு பர்ன்ஹாம் தமது ஆண்டுச் சம்பளத்தில் 15 விழுக்காட்டை வீடற்றோர் நலனுக்காக நன்கொடையாக வழங்கவிருக்கிறார். அவரது ஆண்டுச் சம்பளம் 180,000 பவுண்ட் (311,516 வெள்ளி) என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் தெருக்களில் தூங்குவோரின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 4,793 என்ற உச்சத்தை எட்டியது. நிரந்தர வீடற்றோரின் எண்ணிக்கை 382,000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. 2030க்குள் இந்த எண்ணிக்கை 25 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு, அடுத்த மூன்றாண்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகளை உருவாக்க உதவும். தங்குமிடமும் மறுவாழ்வு ஆதரவும் ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கிடைக்க இது உதவும் என வீடமைப்பு அமைச்சர் ஏஞ்சலா ரெய்னர் கூறினார்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பைத் தொண்டூழிய அமைப்புகள் வரவேற்றுள்ளன. எனினும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும் நிதி திரட்டுவதற்கும் தெளிவான திட்டங்கள் இல்லை என்று எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி விமர்சித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
பிரிட்டன்பிரதமர்நன்கொடைசம்பளம்