ஜோகூர்பாரு: சில நாள்களுக்கு முன்பு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்திய முஸ்லிம் உணவகங்களில் ஏற்பட்டுள்ள ஊழியர் பற்றாக்குறையை ஒரு மாதத்தில் தீர்ப்பதற்கான உறுதிமொழியை அங்குள்ள உணவக உரிமையாளர்களிடம் வழங்கியுள்ளார்.
அந்தப் பிரச்சினையைக் களைவதற்கு சில காலம் தேவைப்படும் என்றாலும் பிரதமர் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்பதாக ஜோகூர் இந்திய முஸ்லிம் தொழில்முனைவோர்கள் சங்கத்தின் செயலாளர் ஹுசைன் இப்ராகிம் கருத்துரைத்தார்.
பல உணவக உரிமையாளர்களுக்கு ஊழியர்கள் பற்றாக்குறை நீண்டநாள் பிரச்சினையாக இருந்தாலும் அண்மையில் அது மிக மோசமாகிவிட்டது என்று திரு ஹுசைன் கூறினார்.
பிரதமர் கொடுத்த உத்தரவாதத்துக்கு முன்பே தீர்வுக்கான பரிந்துரை மனிதவள அமைச்சர் ஆர்.ரமணனிடம் கொடுக்கப்பட்டதையும் திரு ஹுசைன் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறைகளுக்கு இந்திய உணவங்களில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு ஒரு மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் அன்வார் ஜூலை 24ஆம் தேதி தெரிவித்தார்.
பிரச்சினையின் தீவிரத்தை தாம் உணர்ந்துள்ள போதிலும் வேலைக்கு அமர்த்தும் நடைமுறைகள் சட்டப்படி நடக்கவேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
மனிதவள அமைச்சர் திரு ரமணன், தேவையற்ற தடங்கல்களைத் தவிர்த்து வெளிநாட்டு ஊழியர்களின் விண்ணப்பங்களை உடனடியாகப் பரிசீலிக்கும்படி துறை சார்ந்த பிரிவுகளிடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார். மேலும் 20 நாள்களில் விண்ணப்பங்களின் செயல்முறைகளை முடிப்பது அவரது இலக்கு என்பதையும் அவர் விளக்கினார்.

