காட்மாண்டு: நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியின் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெறும் அமைச்சர் ஒருவர் திங்கட்கிழைமை (செப்டம்பர் 22) இதனை அறிவித்தார். அந்த ஆர்ப்பாட்டங்களின் காரணமாக முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா பதவி விலக நேரிட்டது.
நேப்பாளம் பெரிய அளவில் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதை எதிர்த்து அந்நாட்டின் ஜென் ஸீ (Gen Z) தலைமுறை இளையர் ஆர்ப்பாட்டங்களை வழிநடத்தினர். அந்த வன்முறை கலந்த ஆர்ப்பாட்டங்களில் நேப்பாளம் பல ஆண்டு காலமாகப் பார்க்காத ஆக மோசமானவையாக உருவெடுத்தன.
ஆர்ப்பாட்டங்களில் 2,100க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பிரதமர் அலுவலகம், உச்சநீதிமன்ம், நாடாளுமன்றம் ஆகியவை இருக்கும் கட்டடங்களுக்கு அர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
மேலும், கடைத்தொகுதிகள், சொகுசு ஹோட்டல்கள், காட்சி அறைகள் (showrooms) ஆகியவற்றுக்கும் அவர்கள் தீ வைத்தனர். அவை ஊழலில் ஈடுபடும் அரசியல் தலைவர்களுக்குச் சொந்தமானவை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
ஓய்வுபெற்ற நீதிபதி கெளரி பஹாதூர் கார்க்கியின் தலைமையிலான மூவர் குழுவுக்கு விசாரணையை நடத்தி முடிக்க மூன்று மாதங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரமேஷ்வோரே கானல் தெரிவித்தார்.