நோம்பென்: முழுமையாக அழிந்துபோகும் அபாயத்தைப் பெரிய அளவில் எதிர்நோக்கும் அரியவகை ‘பாந்தெங்’ மாடுகள் வெற்றிகரமாக இடம் மாற்றப்பட்டுள்ளன.
முதன்முறையாக கம்போடியாவில் இந்த அரியவகை மாடுகள் ஹெலிகாப்டர் மூலம் லாரியில் ஏற்றப்பட்டதாக இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்தனர். வனப்பகுதிகளை அழிக்கும் நடவடிக்கைகள் (deforestation) அதிகமாக மேற்கொள்ளப்படும் கம்போடியாவில் பாந்தெங் மாடுகள் இடம் மாற்றப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இந்நடவடிக்கை வடகிழக்கு கம்போடியாவின் சியெம் பாங் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
பாந்தெங் மாடுகள், தென்கிழக்காசிய வட்டாரத்துக்குச் சொந்தமான மாடு வகையாகும். இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature) முற்றிலும் அழிந்துபோகும் அபாயத்தைப் பெரிய அளவில் எதிர்நோக்கும் விலங்குகளுக்கான சிறப்புப் பட்டியலில் பாந்தெங் இடம்பெற்றுள்ளது.
பாந்தெங் மாடுகள் இயற்கையில் வனப்பகுதிகளிலும் புல்வெளிகளிலும் வசிக்கும். ஆனால், தற்போது சில ஆயிரம் பாந்தெங் மாடுகள் மட்டுமே இயற்கை வனப்பகுதிகளில் எஞ்சியுள்ளன.
பொதுவாக வேட்டையாடுதல், மரம் வெட்டுதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்புடைய நிறுவனங்களால் அழிந்துபோகும் அபாயம் நிலவுகிறது.