டாவோஸ், சுவிட்சர்லாந்து: உலகப் பொருளியல் மாநாடு, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 23 ஆம் தேதிவரை ஐந்து நாள்கள் நடைபெற்றுவருகிறது.
அந்த மாநாட்டின் அங்கமாக காஸா அமைதிக் குழுவின் உடன்பாடு சார்ந்த கையெழுத்து நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜனவரி 23) நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் புதிய காஸாவின் மறுநிர்மாணத்துக்கான வரைபடங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
அதில் ராஃபா நகரின் கடற்கரையோரத்தில் கண்கவர் புதிய வீடமைப்புகள் உள்பட, காஸாவின் பகுதிகளில் வானுயரக் கட்டடங்கள், விவசாய நிலங்கள், தொழிற்பேட்டைகள் என அங்குள்ள 2.1 மில்லியன் குடிமக்கள் வாழ்வதற்கான வசதிகள் வரைபடங்களாகத் திரையிடப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையில் பொறுப்பேற்கவுள்ள காஸா அமைதிக் குழுவின் அதிகாரபூர்வ கையெழுத்து நிகழ்ச்சியில் இந்தக் கனவுத் திட்டம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்த மறுநிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றுவது அமைதி வாரியத்தின் முக்கியப் பணியாகும்.
“அடிப்படையில் நான் ஒரு சொத்துச் சந்தை நிர்வாகியாவேன். அனைத்தும் இடங்களைச் சார்ந்தே திட்டமிடப்படுகின்றன. பாருங்கள், இந்த கடலோரப் பகுதி எவ்வளவு அழகான சொத்து, பலருக்கு எப்படிப்பட்ட வாய்ப்புகளை இது வழங்கக்கூடும்” என்று அதிபர் டிரம்ப் வரைபடங்களைக் காட்டி பெருமிதம் அடைந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சண்டை நிறுத்தத்தை நடப்புக்குக் கொண்டுவர உதவிய திரு டிரம்பின் மருமகன் ஜார்ட் குஷ்னர், 90,000 டன் அளவு ஆயுதங்கள் காஸாவில் பயன்படுத்தப்பட்டுள்ளதன் விளைவால், 60,000 மில்லியன் டன் இடிபாடுகள் அகற்றப்படவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

