பாரிஸ்: உலகின் நிலக்கரி பயன்பாடு 2024ஆம் ஆண்டில் சாதனை அளவு அதிகரிக்கும் என்று அனைத்துலக எரிசக்தி நிறுவனம் (ஐஇஏ) புதன்கிழமை (டிசம்பர் 18) அன்று தெரிவித்தது.
காலநிலை மாற்றத்தை உருவாக்கும் புதைபடிவ எரிபொருள் எரிப்பதை நிறுத்த உலக அளவில் அழைப்புகள் இருந்தபோதிலும், நிலக்கரிக்கான உலகளாவிய தேவை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக சாதனை அளவை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக எரிசக்தி கண்காணிப்பு குழு தெரிவித்தது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட எரிசக்தி நிறுவனத்தின் 2024 நிலக்கரி அறிக்கையில், இவ்வாண்டு 8.77 பில்லியன் டன்களை எட்டிய பிறகு 2027ல் உலகம் நிலக்கரி பயன்பாட்டில் உச்சத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் சீனா அதிக அளவு நிலக்கரியைச் சார்ந்துள்ளது.
இதனால், சீனா கடந்த நூற்றாண்டில் உலகின் மற்ற நாடுகளைவிட 30 விழுக்காடு அதிக நிலக்கரியை பயன்படுத்தியிருக்கிறது என்று ‘ஐஇஏ’ குறிப்பிட்டது.
பெய்ஜிங் தனது மின்சார தேவைகளை சூரிய சக்தி, காற்றாலை போன்றவற்றின் மூலம் தீர்வு கண்டு வருகிறது. இருப்பினும் 2024ல் சீனாவின் நிலக்கரிக்கான தேவை இன்னும் 4.9 பில்லியன் டன்களை எட்டும் என்று எரிசக்தி நிறுவனம் தெரிவித்தது.
சீனா மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் இந்தோனீசியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளிலும் நிலக்கரி பயன்பாடு அதிகரித்து வருகிறது.
அதே சமயத்தில் முன்னேறிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு மெதுவாக குறைந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியத்திலும் அமெரிக்காவிலும் அந்த சரிவைக் காண முடிகிறது. அங்கு நிலக்கரி பயன்பாடு 2023ல் 23 விழுக்காடு, 17 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது முறையே 12 விழுக்காடு, ஐந்து விழுக்காடு அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.