நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பானில் கடும் வெயிலில் தொடரும் மீட்புப் பணிகள்

நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பானில் கடும் வெயிலில் தொடரும் மீட்புப் பணிகள்

1 mins read
bde5e02a-6071-4ee6-930d-9e84d321cef1
நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த வீட்டின் அருகில் உள்ள சரக்குக் கிடங்கில் மீட்கப்பட்ட பொருள்களை வைத்துள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆடவர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

குமாமோட்டோ: ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36ஐ எட்டியுள்ளது.

அந்தப் பேரிடருக்குப் பிறகு நடந்துவரும் மீட்புப் பணிகளுக்குத் தற்போது நிலவும் கடுமையான வெயில் பெரும் தடங்கலை ஏற்படுத்தி வருகிறது.

நிலநடுக்கத்துக்குப்பின் நான்கு நாள்கள் கடந்தும் இடிபாடுகளில் தொடரும் பின்னதிர்வுகளுடனும் வானிலையுடனும் போராடியவாறே அவசரகால மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியோரைத் தேடிவருகின்றனர்.

அன்றாட வெப்பநிலை 38 டிகிரி செல்சியசை எட்டும் நிலையில் இடிந்து விழுந்த கட்டடங்களில் சிக்கியுள்ளோரைத் தேடும் பணியில் அவர்கள் அயராது பாடுபடுகின்றனர்.

தற்காலிக முகாம்களில் 9,000க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் ஒன்றான குமாமோட்டோவில் மின்சாரம், குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அங்குப் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

முகாம்களில் போதிய வசதிகள் இல்லாததால் கடும் வெப்பத்தாக்கம் காரணமாகப் பலர் தங்களின் கார்களிலேயே இரவைக் கழிக்கின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து குமாமோட்டோவில் வாழும் பொதுமக்களில் பலர் வெப்பத்தாக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

“கோடைக்கால வெயிலுடன் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதால் இரட்டைப் பேரிடர்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது,” என்று ஜப்பானிய அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் மினொரு கிஹாரா வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜப்பானிய அரசாங்கம் குளிர்சாதன வசதிக்கான தளவாடப் பொருள்களை அந்த மாநிலத்துக்குக் கொண்டுவரும் முயற்சிகளை எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்