மாஸ்கோ: உக்ரேன் போன்ற போர் நடைபெறும் இடங்களில் திறன்பேசிகளைப் பயன்படுத்திய துருப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவையான ‘துமா’ பரிந்துரைத்துள்ளது.
கேமரா, இருப்பிடத்தைக் காட்டும் வசதிகள் கொண்ட திறன்பேசிகளைப் பயன்படுத்தியோரைப் பத்து நாள்கள் வரை தடுத்து வைக்க அவர்கள் பரிந்துரைத்ததாக ரஷ்யாவின் அரசாங்கச் செய்தி நிறுவனம் கூறியது.
உக்ரேனியப் போரில் இரு தரப்பினரும் இலக்குகளைக் கண்டறிய கைப்பேசிகளைப் பயன்படுத்தியதாக ரஷ்ய அதிகாரிகளும் மேலை நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கூறினர்.
படமெடுத்தல், ஒலிப்பதிவு, இருப்பிடத்தைக் காட்டும் தகவல் பரிமாற்றம் போன்ற வசதிகள் கொண்ட மின்னிலக்கக் கருவிகளைப் போர் நடைபெறும் வட்டாரத்தில் பயன்படுத்துவதை ஒழுங்குமுறை மீறலாகக் கருத வேண்டும் என்று ‘துமா’ தற்காப்புக் குழு ஆதரிக்கும் சட்ட நகல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சட்டம், இத்தகைய ஒவ்வொரு ஒழுங்குமுறை மீறலுக்கும் துருப்பினரைப் பத்து நாள்கள் வரைத் தடுத்துவைக்கும் அதிகாரத்தை ராணுவப் பிரிவுத் தளபதிகளுக்கு வழங்கும்.
போர்க்களத்தில் எதிர்த்தரப்பினரை எளிதில் கண்டறிவதற்கான பல்வேறு வாய்ப்புகளைக் கைப்பேசிகள் வழங்குவதாக ‘எனியா’ இணையப் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம் இந்த ஆண்டு (2024) வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
ரஷ்யத் துருப்பினர் பற்றியோ அவர்கள் இருப்பிடம் பற்றியோ தகவல் பகிர விதிக்கப்பட்டுள்ள தடையை மீறும் துருப்பினரையும் 10 நாள்கள் வரைத் தடுத்து வைக்கவும் ‘துமா’ பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.