கோத்தா கினபாலு: மலேசியக் கூட்டரசு அரசாங்கத்துடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இயற்கை வளங்கள் மற்றும் நீடித்த நிலைத்தன்மையை நிர்வகிப்பதில் மாநிலத்தின் தன்னாட்சி அதிகாரத்தை மேம்படுத்தும் ஒரு பகுதியாக, சுற்றுப்புற நிர்வாகத்தில் தனது அதிகாரத்தை வலுப்படுத்த சாபா மாநிலம் தயாராகி வருகிறது.
கூட்டரசு அரசியலமைப்பின் 95C பிரிவின்கீழ், மாநிலத்தில் கழிவுகளை நிர்வகிப்பது தொடர்பாக சாபாவின் அதிகாரத்தை வலுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று மலேசியாவின் சுற்றுப்பயண, கலாசாரம் மற்றும் சுற்றுப்புற அமைச்சர் ஜாஃப்ரி அரிஃபின் தெரிவித்தார்.
திங்கிட்கிழமை (பிப்ரவரி 23) இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுப்புற நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப்பைச் சந்தித்த பிறகு பேசிய அமைச்சர் ஜாஃப்ரி, “இந்தக் கலந்துரையாடல், 1963ஆம் ஆண்டு மலேசியா ஒப்பந்தத்திற்கு ஏற்ப, உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் சுற்றுப்புறச் சட்டங்களை அமல்படுத்தவும் நடைமுறைப்படுத்தவும் மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதை உறுதி செய்வதற்கான சாபாவின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,” என்று கூறினார்.
நவம்பர் 2026க்குள் இந்த அதிகார மாற்றம் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதற்கு முன்னதாக, ஒன்பது தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய சாபா தயாராகி வருவதாக ஜாப்ரி தெரிவித்தார்.

