கோலாலம்பூர்: பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து மலேசியாவில் செவ்வாய்க்கிழமை இரவு ‘பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மலேசியா’ பேரணி அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையில் நடக்கவுள்ளது.
இந்தப் பேரணியில் அனைத்து மலேசியர்களும் ஒன்றுபட்டு பங்கேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் பேரணியில் பங்கேற்பதன்மூலம் ஒருங்கிணைந்த சக்தியாக செயல்பட்டு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தங்கள் வலுவான நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பேரணி புக்கிட் ஜலீலில் உள்ள ஆக்சியாட்டா அரங்கத்தில் நடைபெறும்.
மலேசிய மனிதநேய உதவி, நிவாரண அமைப்பு (மஹர்), மலேசிய ஆலோசனை கவுன்சில் இஸ்லாமிய அமைப்புக்கான மலேசிய ஆலோசனை மன்றம் (மாபிம்) உட்பட 40க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்தப் பேரணியில் கிட்டத்தட்ட10,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேரணி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற உள்ளது.
பாலஸ்தீனத்துக்கு மலேசியாவின் ஆதரவைக் காட்டுவதற்காக, பேரணியில் பங்கேற்பவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து பாலஸ்தீன, மலேசிய தேசியக் கொடிகளை அசைக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

