டொரோன்டொ: கனடாவின் டொரோன்டோ நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தை அன்று காலை 5.29 மணிக்குச் சென்றடைந்த காவல்துறையினர், துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.
செய்தியாளர்கள் கேட்டபோது டொரோன்டோ நகர் அமெரிக்கத் தூதரகம், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சு ஆகியவை உடனடியாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
கனடியக் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் சந்தேக நபர் பற்றிய எந்த விவரமும் இல்லை எனவும் மற்றொரு பதிவில் கூறியுள்ளனர். வேற எந்த விவரங்களையும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தையும் கனடியக் காவல்துறை வெளியிடவில்லை.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நாட்டுவெடிகுண்டு ஒன்று வெடித்தது.
சந்தேக நபரைத் தேடிவருவதாகவும் விசாரணையில் ஈரானில் நடக்கும் போரும் குண்டு வெடிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் நார்வே காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இஸ்லாமிய சமயத்துக்கு எதிராகக் கடந்த வார இறுதியில் நியூயார்க் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டு ஆடவர்கள்மீது நாட்டுவெடிகுண்டு வீசிய குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


