வாஷிங்டன்: வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்தனர்.
ஐந்து மாணவர்களும் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் ஏப்ரல் 30ஆம் தேதி சம்பவத்தில் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஷிங்டனில் டகோமாவில் உள்ள ஃபோஸ் உயர்நிலைப் பள்ளியில் பிற்பகல் 1.30 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி மே 1 விடியற்காலை 4.30 மணி) கத்திக் குத்து சம்பவம் நடைபெற்றது. இது, மோதலால் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
கத்திக்குத்து காயங்களால் நான்கு மாணவர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று டகோமா தீயணைப்புத் துறையின் பேச்சாளர் செல்சி ஷெப்பார்ட் கூறினார்.
டகோமா காவல்துறையின் அதிகாரியான ஷெல்பி பாய்ட், ஒரு பாதுகாப்பு ஊழியரும் சந்தேக நபர் எனக் குறிப்பிடப்படும் ஒரு மாணவரும் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றார்.
கத்திக் குத்து பள்ளியின் வளாகத்திற்குள் நடைபெற்றது. தீயணைப்பாளர்கள் அங்கு வந்தபோது காயமடைந்த ஒருவர் பள்ளிக்கு வெளியே கிடந்தார் என்றும் அவர் கூறினார்.
உடனடியாக பள்ளி மூடப்பட்டதாகவும் சம்பவம் குறித்து பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் ஃபோஸ் பள்ளியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

