‘அமெரிக்கப் பல்கலைக்கழக வளாகங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன’

‘அமெரிக்கப் பல்கலைக்கழக வளாகங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன’

2 mins read
47a79b23-7151-4dc3-b1ec-3fa289fb3b4b
அமெரிக்காவின் கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சலிஸ் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள், அதிகாரிகளுக்கு எதிராகத் தாங்கள் இட்ட தடுப்புகளை மீண்டும் வலுப்படுத்திக்கொண்டனர். - படம்: இபிஏ

ஜெருசலம்: பல்கலைக்கழக வளாகங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்கர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி வந்தாலும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இடம்பெயர்ந்து தவிக்கும் பாலஸ்தீனர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களால் நம்பிக்கை பெறுவதாகக் கூறியுள்ளனர்.

போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தங்களது ஒருமைப்பாட்டை அந்த பாலஸ்தீனர்கள் தெரிவித்திருப்பதுடன் அந்த முயற்சிகளுக்கு நன்றியும் நவின்றுள்ளனர்.

இஸ்‌ரேலிய குண்டுவீச்சு, நிலவழிச் சண்டை ஆகியவற்றிலிருந்து அடைக்கலம் நாடி ராஃபாவில் சுமார் ஒரு மில்லியன் பேர் தங்கியிருக்க, அங்குள்ள சில கூடாரங்களின் மீது ஆதரவு தெரிவிக்கும் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.

“அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நன்றி,” என்று ஒரு குறிப்பிலும், “காஸாவுடன் ஒருமைப்பாட்டு உணர்வோடு நிற்கும் மாணவர்களுக்கு நன்றி. செய்தி எங்களை அடைந்தது,” என்று மற்றொரு குறிப்பிலும் காணப்பட்டன.

அமெரிக்காவின் பல்கலைக்கழக வளாகங்கள் பலவற்றில் பதற்றநிலை அதிகரித்துள்ளது. கலகத்தடுப்புக்கு ஆயத்தமாக வந்த காவல்துறையினர், நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரைக் கைதுசெய்தனர்.

இத்துடன் மற்ற கல்விக்கழகங்களில் கூடாரங்கள் அமைத்தும் கல்விசார் கட்டடங்களைக் கைப்பற்றியும் பாலஸ்தீனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அதிகாரிகள் மோதும் சூழல் ஏற்பட்டது.

இஸ்‌ரேலுடன் தொடர்புகளுடைய நிறுவனங்களிடமிருந்து விலகிக்கொள்ளுமாறு பல்கலைக்கழகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். இதிலிருந்து பின்வாங்குவதாக இல்லை என்றும் சிலர் உறுதியளித்துள்ளனர்.

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்கள் புதிய சாத்தியத்துக்கான ஓர் உணர்வைத் தன்னுள் ஏற்படுத்தியுள்ளதாகப் போர் தொடர்பாக சமூக ஊடகத்தில் ஆவணப்படுத்தி வரும் 25 வயது திருவாட்டி பிசான் ஒவ்டா கூறியுள்ளார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“என் வாழ்நாள் முழுவதும் காஸா பகுதியில் கழித்திருக்கிறேன். இப்போது என்னுள் நிலவும் நம்பிக்கை போல் இதற்குமுன் இருந்ததில்லை,” என்று தன்னை இன்ஸ்டகிராம் தளத்தில் பின்தொடரும் 4.5 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்குப் பதிவுசெய்த காணொளியில் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்