சோல்: தென்கொரியாவில் அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள திரு யூன் சுக் இயோல் மீது அரசாங்கத்துக்கு எதிரான திட்டமிட்ட கிளர்ச்சி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உயர்பதவி வகிப்போர் தொடர்பிலான ஊழல் விசாரணை அலுவலகம் (CIO), 51 நாள் நடத்திய விசாரணையின் முடிவில் அரசாங்க வழக்கறிஞர்களிடம் அவ்வாறு பரிந்துரைத்தது.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, திரு யூன் ராணுவ ஆட்சிச் சட்டத்தை அமல்படுத்த முயன்றதன் தொடர்பில் அந்த விசாரணை இடம்பெற்றது.
அரசாங்கத்துக்கு எதிரான திட்டமிட்ட கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அதிபர் யூன் மீது சுமத்தும்படி சோல் மத்திய மாவட்ட அரசாங்க வழக்கறிஞர்கள் அலுவலகத்திடம் கோரிக்கை வைக்க முடிவெடுத்துள்ளதாக ‘சிஐஓ’ தெரிவித்தது.
சென்ற ஆண்டு (2024) டிசம்பர் 3ஆம் தேதி, முன்னாள் தேசியத் தற்காப்பு அமைச்சர், ராணுவத் தளபதிகளுடன் சேர்ந்து திரு யூன் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக அது குறிப்பிட்டது.
அரசாங்க வழக்கறிஞர்கள் 11 நாள்களுக்குள் அவர் மீது குற்றம் சுமத்தலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வர்.
திரு யூன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர், தென்கொரியாவில் குற்றவியல் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்ட முதல் அதிபராவார்.