காஸா: இஸ்ரேலிய ராணுவம், ஹமாஸ் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நோக்கில் காஸாவில் போரைத் தொடங்கி ஐந்து வாரங்கள் முடிவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச. 5) அங்கு கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
பாலஸ்தீனப் பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிப்பதைக் குறைத்துக்கொள்ளும்படி அமெரிக்கா இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ள வேளையில் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் நகரின் முக்கியப் பகுதியைத் தனது ராணுவப் படைகள் சுற்றிவளைத்திருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. போர் விமானங்களும் தாக்குதல் மேற்கொண்டதாக அது சொன்னது.
ஹமாஸ் வீரர்கள் இஸ்ரேலியர்களுடன் கடுமையான மோதலில் ஈடுபட்டதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
“தரைவழிப் போர் தொடங்கியதிலிருந்து ஆகக் கடுமையான தாக்குதலை மேற்கொண்டோம்,” என்று இஸ்ரேலிய ராணுவ தெற்கு தளபத்தியத்தின் ஜெனரல் யாரோன் ஃபின்கெல்மன் கூறினார்.
அண்மைய சண்டை நிறுத்தத்திற்குப் பிறகு, மிகத் தீவிரமான முறையில் நடந்த மோதல் அது என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இரு இடங்களிலும் தாக்குதலைக் கடுமையாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது.
செவ்வாய்க்கிழமை தாக்குதலில் இஸ்ரேலியத் துருப்பினர் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்கிறது ஹமாஸ். இஸ்ரேலிய ராணுவத்தின் 24 வாகனங்களை அழித்ததாகவும் அது சொல்கிறது.
கான் யூனிசிற்கு வடக்கே வீடுகளின்மேல் இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 45 பேர் கொல்லப்பட்டதாக ஷுஹாதா அல்-அக்ஸா மருத்துவமனை தெரிவித்துள்ளது. அந்தத் தகவலை உறுதிசெய்ய இயலவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
கான் யூனிசில் பள்ளி ஒன்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த பாலஸ்தீனர்கள் நாசர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். தங்கள் வசிப்பிடங்களைவிட்டு வெளியேறிய பாலஸ்தீனர்கள் தஞ்சம் புகுந்துள்ள இடம் அது.
மருத்துவமனையின் தரையெங்கும் காயமடைந்தோர் படுக்கவைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் சிறு குழந்தைகளும் அடங்குவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனர்களின் புகலிடங்களையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் இத்தகைய கடுமையான தாக்குதலை நிறுத்திக்கொள்ளாவிட்டால் பிணையாளிகள் இனிமேல் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று ஹமாஸ் எச்சரித்துள்ளது.