கொழும்பு: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள் மீது பழைய ஆவணமின்மை காரணமாக எவ்விதச் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.
இந்த மனிதநேய நடவடிக்கைக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முறையான பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவில் தங்கியிருப்பவர்கள், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அணுகி பாதுகாப்பு அனுமதியைப் பெறலாம் என்றும் அவர்களுக்குத் தேவையான தற்காலிகக் கடப்பிதழ், பயண ஆவணங்களை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் இலங்கைத் தற்காப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் பாதுகாப்பாகவும் எளிதாகவும் தாயகம் திரும்புவதற்கு இலங்கை அரசு விரிவான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், அதுகுறித்த முக்கிய அறிவிப்பை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் ஏறக்குறைய 90,000க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முகாம்களில் அனைவரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2002 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ஏறக்குறைய 18,000 பேர் ஏற்கெனவே தாயகம் திரும்பியுள்ளனர்.
எஞ்சியுள்ள அகதிகள் எவ்விதச் சட்டச் சிக்கலுமின்றி நாடுதிரும்ப ஏதுவாகக் குடியுரிமை நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 1, 2006ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் இருந்து வெளியேறியவர்கள், குற்றவியல் வழக்குகளில் தொடர்பில்லாதவர்கள் இந்தச் சிறப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக உதவி-சட்டப் பாதுகாப்பு
பாதுகாப்புச் சோதனை நிறைவடைந்த பிறகு, தகுதிவாய்ந்த அகதிகள் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்கள் அல்லது துறைமுகங்கள் வழியாக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.


