கம்யூனிச ஆட்சி மலர்ந்து 70 ஆண்டுகளாகியிருப்பதைக் கொண்டாடும் சீனா, அதன் தேசிய தின நிகழ்ச்சியில் மாபெரும் ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது.
அதில் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களும் ஏவுகணைகளும் காட்சிப் படுத்தப்பட்டன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், ஆளில்லா சூப்பர்சோனிக் டிரோன்கள் போன்றவையும் இடம்பெற்றன. அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கக்கூடிய அளவுக்கு நெடுந்தொலைவு ஏவுகணைகளையும் சீனா வைத்திருப்பது இந்த அணிவகுப்பின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சீனாவின் தியனான்மென் சதுக்கத்தில் இன்று (அக்டோபர் 1) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிபர் ஸி ஜின்பிங் உடன் முன்னாள் அதிபர்கள் ஜியாங் ஸெமின், ஹு ஜின்டாவோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்தக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஹாங்காங்கில் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல ரயில் நிலையங்கள், கடைத்தொகுதிகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் மிகுந்த விழிப்பு நிலையில் இருக்கின்றனர். ஹாங்காங் நகரமே கிட்டத்தட்ட முடங்கிய நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது.
கறுப்பு வண்ண உடை, குடை ஆகியவற்றுடன் ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் சாலைகளில் பேரணியாகச் சென்றதையடுத்து, போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.
தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரத் தடுப்பு போலிசார் மீது செங்கல், போத்தல்கள் போன்றவற்றை வீசித் தாக்கினர்.
அரசாங்கக் கட்டடங்களைச் சுற்றிலும் தண்ணீர் நிரப்பிய தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. வான் சாய் பகுதியில் உள்ள பௌஹினியா ஸ்குவேரில் இன்று காலை எட்டு மணியளவில் கொடியேற்றப்பட்டது.
பெட்ரோல் குண்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டதற்காக நேற்றிரவு ஐவர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. கறுப்பு நிற பலூன்கள் வைத்திருந்ததாக மேலும் 14 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ஸி, சீனாவின் வளார்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்றார். இன்னும் 30 ஆண்டுகளில் சீனாவை முழுமையாக வளர்ச்சியடைந்த, வளமான, சக்திவாய்ந்த நாடாக்கப்போவதாக அவர் குறிப்பிட்டார்.