தாய்லாந்து அரசர் மகா வஜிரலங்கோனுக்கு விசுவாசமாகவும் நன்றியுடனும் இல்லாததால் திருவாட்டி சினீனாட் வோங்வஜிரபக்டியின் ‘ராயல் நோபல் கன்சோர்ட்’ எனும் பட்டமும் ராணுவப் பொறுப்புகளும் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அறிக்கையில் நேற்று (அக்டோபர் 21) தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட நூறாண்டு காலமாக ‘ராயல் நோபல் கன்சோர்ட்’ எனும் பட்டம் யாருக்கும் வழங்கப்படாத நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் அரசரின் பிறந்தநாளன்று இந்தப் பட்டம் திருவாட்டி சினீனாட்டுக்கு வழங்கப்பட்டது. முன்பு தாதியாக இருந்த திருவாட்டி சினீனாட் தாய்லாந்து வரலாற்றிலேயே இரண்டாவதாக ‘ராயல் நோபல் கன்சோர்ட்’ பட்டம் பெற்றவர்.
கடந்த மே மாதத்தில் மன்னராக முடிசூட்டிக்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு நான்காவது மனைவியான திருவாட்டி சுதிடா டிஜாயை ராணியாக மன்னர் அறிவித்ததையடுத்து, திருவாட்டி சினீனாட்டுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் திருவாட்டி சினீனாட் அரசருடன் பல்வேறு இடங்களில் இருக்கும் பல புகைப்படங்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் அரண்மனை இணையப்பக்கத்தில் பதிவிடப்பட்டது. அந்த இணையப்பக்கமே செயல்பட முடியாத அளவுக்கு அந்தப் படங்களைப் பலரும் பார்த்தனர்.
ராணி சுதிடாவின் பதவிக்கு எதிராக திருவாட்டி சுனீனாட் நாசவேலைகளைச் செய்வதாகவும் அரச தம்பதியின் விவகாரங்களில் அளவுக்கதிகமாகத் தலையிடுவதாகவும் நேற்று வெளியான அரசாங்க அறிக்கை குறிப்பிட்டது. மேலும் தாம் ராணியாக நியமிக்கப்படுவதற்கான அனைத்தையும் திருவாட்டி சினீனாட் செய்ததாகவும் அறிக்கை தெரிவித்தது.
அந்த அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே ‘ராயல் நோபல் கன்சோர்ட்’ பட்டத்தை அரசர் அவருக்கு வழங்கினார். ஆனால் அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்தபோது, அவருக்கு வழங்கிய பட்டத்துக்கு ஏற்றதாக அவை இல்லை என்றும் அரசருக்கு திருவாட்டி சினீனாட் நன்றியுடையவராக இல்லை என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
இளவரசராக இருந்தபோது அரசர் வஜிரலங்கோன் மூன்று திருமணங்கள் புரிந்தவர். அவற்றின்மூலம் அவருக்கு ஐந்து மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். ராணி சுதிடா அரசரின் நான்காவது மனைவி. அவருக்கு பிள்ளைகள் இல்லை.