நகைக்கடைக்குள் புகுந்த ஓர் ஆடவர் சரமாரியாகச் சுடத் தொடங்கியதில் இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் கொல்லப்பட்டனர். மேலும் நால்வர் காயமடைந்தனர்.
தாய்லாந்தின் ‘ராபின்சன் மால்’ கடைத்தொகுதியில் நேற்று இரவு நடந்த இச்சம்பவத்தில், முகமூடி அணிந்திருந்த ஓர் ஆடவர் நகைக்கடையில் நுழைந்து அங்கிருந்த ஊழியரையும் வாடிக்கையாளரையும் சுடும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
அதையடுத்து கடையில் இருந்த தங்கச் சங்கிலிகள் பலவற்றை அந்த ஆள் அள்ளியெடுத்ததையும் காணொளி காட்டியது.
நகைக்கடைக்கு அருகில் ஒரு பெரியவருடன் நடந்து சென்று கொண்டிருந்த குழந்தை திடீரென்று சரிந்து தரையில் விழும் காட்சி இன்னொரு காணொளியில் பதிவாகியிருந்தது.
தலையில் சுடப்பட்ட அக்குழந்தை மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தது.
இவ்வாறு கருணையே இல்லாத அக்கொள்ளைக்காரனைத் தீவிரமாகத் தேடி வருவதாக அவ்வட்டாரத் தலைமை போலிஸ் அதிகாரி கூறினார்.
அத்துடன் அவனை பிடித்துத் தண்டனை விதிப்பது உறுதி என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, துப்பாக்கிக்காரனைப் பிடித்துக் கொடுப்போருக்கு போலிசாரும் மற்ற தரப்புகளும் 500,000 பாட் ($22,314) சன்மானம் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“உன்னைப் பாதுகாக்க நாங்கள் தவறிவிட்டோம். எங்களை மன்னித்துவிடு,” என்று உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் தங்களின் ஃபேஸ்புக்கில் மிக உருக்கமாகப் பதிவிட்டிருந்தனர்.
இதன் தொடர்பில் துப்பாக்கிகளைக் கையாள்வதில் கொள்ளைக்காரன் கைதேர்ந்தவன் என்று மூத்த போலிஸ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity