இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர், மூவர் காயமுற்றனர்.
சுமார் 30 பேர் நேற்று பிற்பகலில் கவுர் எனும் நகரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அந்தப் பாலத்தின் மீது இருந்தனர். அப்போது திடீரென அந்தப் பாலம் இடிந்ததில் சிலர் கீழே இருந்த தண்ணீருக்குள் விழுந்து மூழ்கினர். சிலர் பாலத்தின் பக்கவாட்டு கம்பிகளைப் பிடித்துக்கொண்டு தொங்கினர்.
அந்தச் சமயத்தில் பாலத்தின் மீது இருந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்று உள்ளூர் பேரிடர் மீட்பு முகவை தெரிவித்தது.
பாலத்துக்குக் கீழே தண்ணீரின் அளவு வழக்கத்தைவிட கூடுதலாக இருந்ததாகவும் கனமழை காரணமாக அங்கு தண்ணீர் வேகமாகப் பாய்ந்து சென்றதாகவும் கூறப்பட்டது.
“பாரம் தாங்காமல் பாலம் உடைந்திருக்க வேண்டும். 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இன்னும் ஒருவரைக் காணவில்லை,” என்று உள்ளூர் பேரிடர் மீட்பு முகவையின் தலைவர் ஊஜாங் சையாஃப்ரி ஏஎஃப்பி செய்தியாளரிடம் இன்று தெரிவித்தார்.
நீருக்குள் விழுந்தவர்களில் சிலர் மீட்கப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட மீட்புப்படை அதிகாரிகள் சுமார் 20 கி.மீ. சுற்றளவுக்கு தண்ணீரில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் பதின்ம வயதினர் என்று தெரிவிக்கப்பட்டது.
தலைநகர் ஜகார்த்தா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கனமழை காரணமாக உருவான வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் இந்த மாதத்தில் மட்டும் சுமார் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
#தமிழ்முரசு #இந்தோனீசியா #பாலம்