130க்கும் அதிகமானோரைப் பலிகொண்ட வூஹான் கொரோனோ கிருமித் தொற்றின் தாக்கம் இன்னும் 10 நாட்களில் உச்சநிலையை எட்டக்கூடும் என்று நேற்று (ஜனவரி 28) சீன அரசாங்க நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
ஹாங்காங்கிலும் சீனாவிலும் 2002, 2003ஆம் ஆண்டுகளில் 650 பேரின் உயிரைக் குடித்த ‘சார்ஸ்’ கிருமியைப் போன்றது இந்த கொரோனா வைரஸ் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதத் தொடக்கத்தில் வூஹானில் தொடங்கிய இந்தப் புதிய கிருமித் தொற்றால் தற்போது சீனாவில் மட்டும் 6,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த கிருமித் தொற்றின் பாதிப்பு நிலவுகிறது. சிங்கப்பூரில் இதுவரை 10 பேர் இந்தக் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் எழுவர் இந்தக் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால், இந்தப் புதிய கிருமித் தொற்று பெருமளவில் பெருகாது என்றும் இன்னும் பத்து நாட்களுக்குள் அது உச்சநிலையை எட்டிவிடும் என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் பிரபல ஆய்வாளர் டாக்டர் ஸோங் நன்ஷான் கூறியுள்ளார்.
“இந்தக் கிருமித் தொற்றைக் குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் இந்தத் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறையும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நோயின் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாக பொது இடங்களுக்குச் சென்று வந்ததால் அதிக அளவில் கிருமித் தொற்று பரவியதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் கிருமித் தொற்று பரவல் குறையும் என்றார்.
#தமிழ்முரசு #வூஹான் #wuhan